புவி காந்தப்புலத்தைப் பயன்படுத்தும் பாக்டீரியா | இயற்கையில் அறிவியல் 18
சில கடல்வாழ் உயிரினங்களும் பறவைகளும் புவி காந்தப்புலத்தை வழிகாட்டியாகப் பயன்படுத்துகின்றன என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பரிணாமத்தின் ஆரம்பக் கட்டத்தில் உருவான ஒரு செல் பாக்டீரியாகூடப் புவி காந்தப்புலத்தைப் பயன்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், புவி காந்தப்புல வரலற்றையும் நமக்குக் காட்டும் வரலாற்று ஆதாரமாகவும் இந்த பாக்டீரியா வகை உதவுகிறது என்பது இன்னுமோர் ஆச்சரியம்.
புவி என்னும் காந்தம்: புவியின் மேலடுக்கு திடப்பொருளாக இருந்தாலும் உள்ளடுக்குகள் இன்னமும் உலோகக்குழம்புகளாகத்தான் உயர் வெப்பநிலையில் இருக்கின்றன. புவியின் சுழற்சியால் உலோகக் குழம்புகள் மூலம் காந்தப்புலம் உருவாகிறது. இக்காந்தப்புலம் பூமியை ஒரு கவசம்போல் சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் உயர் ஆற்றல் அயனிகளிடம் இருந்து பாதுகாக்கிறது.
புவியில் உயிரினங்கள் உருவாகும்போது, புவியின் காந்தப் புலத்தைத் தங்கள் தகவமைப்புக்கு ஏற்றாற் போல் பயன்படுத்தும் திறமையைப் பரிணாம வளர்ச்சி மூலமாகப் பெற்றிருக்கின்றன. பறவைகள் தங்கள் வலசைப் பயணத்துக்கு இதைப் பயன்படுத்துகின்றன.
சில கடல் வாழ் உயிரினங்கள் திசை காட்டியாகப் பயன்படுத்துகின்றன. அதேநேரம், தேவாங்குகளுக்குத் திசை அறியும் திறன் இருப்பதாகத் தமிழ் நாவல்கள், கதைகளில் பேசப்படுகிறது. இதற்கு இதுவரை எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
மேக்னட்டடேக்டிக் பாக்டீரியா: கலங்கிய நீர்நிலைகள், சகதிப் பரப்பில் மேக்னட்டடேக்டிக், பாக்டீரியாக்கள் (magnetotactic bacteria) வாழ்கின்றன. குறிப்பாக அதன் வாழ்க்கைக்கு ஆக்சிஜன் குறைவாக இருக்கும் பகுதிதான் தேவை. எந்த ஆழத்தில் ஆக்சிஜன் குறைவாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதை நோக்கி இந்த பாக்டீரியா செல்ல வேண்டும்.
ஆனால் இந்த பாக்டீரியா வகைக்குக் கண்கள் கிடையாது. திசையை உணரும் உணர்வி உறுப்பும் கிடையாது. ஆனால், அதன் உடலில் மேக்னடைட் என்னும் காந்தப்படிகங்கள் வரிசையாக அடுக்கிய நிலையில் இருக்கின்றன. இந்த மேக்னடைட் படிகங்கள் ஃபெர்ரீ காந்தத்தன்மையைக் (Ferrimagnetic) கொண்டிருப்பதால் புவியின் காந்தப்புலத்தின் வட தென்திசைக்கு ஏற்றவாறு ஒருங்கமைத்துக்கொள்கின்றன.
