

திணை நிலங்களுக்கு அகத்திணை மலர்களின் பெயர்களைச் சூட்டிப் பெருமைப்படுத்தியது தொடங்கி, புறத்திணை மலர்களாக-போர்ப்பூக்களாக மலர்களைக் கொண்டிருந்ததுவரை தமிழ் மொழி, பண்பாட்டிலிருந்து தாவரங்களைப் பிரித்துப் பார்க்கவே முடியாது.
இன்றைய நவீன வசதிகள் ஏதும் இல்லாத காலத்திலேயே தாவரங்கள், அவற்றின் தன்மை, உறுப்புகள், மலர்கள், அவற்றின் மணம், நிறம், குணம் எனப் பல்வேறு அம்சங்களைக் கவனப்படுத்தி தமிழ்ப் புலவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
ஒரு மலரின் ஏழு நிலைகளாக அரும்பு, முகை, மொட்டு, போது, மலர், அலர், செம்மல் என இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அதேபோல் தாவரங்களை, பூக்களை நுணுக்கமாக வேறுபடுத்தி அறியத் தெரிந்திருந்தால்தான், அவற்றை வகைப்படுத்தவும் அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ளவும் முடியும்.
தாவரங்களை ஊன்றிக் கவனித்து உவமை, உருவகங்களாகப் பயன்படுத்திப் பண்டைக் காலத்தில் இருந்தே தமிழ்ப் புலவர்கள் பாடியுள்ளனர். இந்தப் பாடல்களுக்கு உரையாசிரியர்கள் தொடங்கி, நவீனக் காலத் தமிழ்ப் புலவர்கள் வரை பலரும் பதவுரை, பொழிப்புரைகளை எழுதியுள்ளனர்.
தமிழ் போன்ற நெடிய தொடர்ச்சி, வரலாறு, இலக்கியம் ஆகிய வற்றைக் கொண்ட மொழியில் இயற்கை குறித்து இவ்வளவு நுணுக்கமான பதிவுகள் இருப்பது பல்வேறு வகைகளில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. உயிர் வளமும் இலக்கிய வளமும் பிணைந்து வளர்ந்த மொழிகளில் தலையாயது தமிழ்.
புரிதல் இடைவெளி
அதேநேரம் கடந்த நூற்றாண்டில் நவீனத் தாவரவியல் கல்வி நம் நாட்டில் பரவலானபோது, அது மேற்கத்திய நூல்களைப் பிரதி எடுப்பதாகவே பெரும்பாலும் இருந்திருக்கிறது. நமது தாவரங்கள் குறித்து பாடப்புத்தகங்களில் விரிவாக எழுதப்பட்டதுபோல் தெரியவில்லை.
அது மட்டுமல்லாமல் தங்களைச் சுற்றியுள்ள தாவரங்களைப் பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் நூல்கள், கட்டுரைகள் அதிக அளவில் வெளிவரவில்லை. கடந்த 20-30 ஆண்டுகளாக இந்த நிலை சற்று மாற்றம் கண்டுவருகிறது.