Last Updated : 13 May, 2023 08:02 PM

 

Published : 13 May 2023 08:02 PM
Last Updated : 13 May 2023 08:02 PM

காலநிலை மாற்றம்: பிரான்சில் தொடங்கியிருக்கும் புதிய புரட்சி

காலநிலை மாற்றம் நம்மையும் நாம் வாழும் உலகையும் இன்று அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளது. இந்தக் காலநிலை மாற்றத்துக்குப் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடே முக்கிய காரணம். புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் கரிம உமிழ்வு, பசுங்குடில் விளைவை ஏற்படுத்துகிறது. காலநிலை மாற்றப் பேரிடர்களுக்கு இதுவே வழியமைத்துக்கொடுக்கிறது. இது வெறும் கூற்றல்ல; அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

நிதியுதவி கிடையாது

காலநிலை மாற்றத்தின் மீளவே முடியாத நிலையை நோக்கி நாம் விரைந்து சென்றுகொண்டு இருக்கிறோம். இந்த இக்கட்டான சூழலில், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும், ஆர்வலர்களும் புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டுக்கு எதிராக மிகத் தீவிரமாகக் களப்பணியாற்றி வருகிறார்கள். புதைபடிவ எரிபொருள்களுக்கு மாற்றாக, சூரிய ஒளி, காற்று, நீர், கடல் அலை போன்ற பசுமை ஆற்றல் ஆதாரங்களைப் பயன்படுத்த வேண்டும் எனும் பிரச்சாரத்தை அவர்கள் உலகெங்கும் முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

இதன் நீட்சியாக, தற்போது பிரான்சின் மிகப்பெரிய வங்கியான பிஎன்பி பரிபாஸ் (BNP Paribas), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களுக்கு மாறுவதை ஊக்குவிக்கும் விதமாக, புதிய புதைபடிவ எரிபொருள் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க முடியாது என்று அறிவித்துள்ளது. முக்கியமாக, புதைபடிவ எரிபொருள் திட்டங்களுக்கு ஏற்கெனவே வழங்கிக்கொண்டு இருக்கும் நிதியுதவியை பிஎன்பி பரிபாஸ் படிப்படியாக நிறுத்தும். 2030க்குள் அந்த நிதியுதவியை 80% அளவுக்குக் குறைக்கவும் அந்த வங்கி உறுதியளித்துள்ளது.

ஐரோப்பா வங்கிகள்

இ.எஸ்.ஜி (சுற்றுச்சூழல், சமூகம், அரசாங்கம்) போக்குகள், பங்குதாரர்களின் அழுத்தங்கள், காலநிலை மாற்ற அச்சுறுத்தல்கள் போன்ற காரணங்களால், ஐரோப்பியாவின் சில வங்கிகள் சமீபத்திய மாதங்களில் புதைபடிவ எரிபொருள் திட்டங்களுக்கு நிதியளிப்பதில் கடுமையான விதிகளை அறிவித்துள்ளன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் நெதர்லாந்தின் ஐ.என்.ஜி வங்கி, புதிய புதைபடிவ எரிபொருள் உற்பத்தி, சேமிப்புத் திட்டங்களுக்கு நிதியளிக்க முடியாது என்று அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் புதிய நிதியுதவியை 50% அதிகரிப்பதை அது இலக்காகக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது. புதைபடிவ எரிபொருள் துறையின் ஆதிக்கத்தைக் குறைக்க முயலும் ஐரோப்பா வங்கிகளின் பட்டியலில், பிஎன்பி பரிபாஸ் வங்கியும் சமீபத்தில் இணைந்துள்ளது.

அமெரிக்கா வங்கிகள்

புதைபடிவ எரிபொருளின் ஆதிக்கத்தைக் குறைக்கும் போக்கு, ஐரோப்பாவில் மட்டுமல்லாமல்; அமெரிக்காவிலும் தொடங்கி இருக்கிறது. அமெரிக்காவின் சிட்டிகுரூப், பாங்க் ஆஃப் அமெரிக்கா, வெல்ஸ் பார்கோ ஆகிய வங்கிகள், அவற்றின் பங்குதாரர்களாலும், சுற்றுச்சூழல் குழுக்களாலும் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகி உள்ளன. புதைபடிவ எரிபொருட்களுக்கான நிதியுதவியை முழுமையாகவோ படிப்படியாக அவை விரைவில் நிறுத்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போக்கு விரைவில் உலகெங்கும் பரவக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x