கொல்லும் கரியமில வாயு

கொல்லும் கரியமில வாயு
Updated on
1 min read

பெருங்கடல் உயிரினங்களிலேயே அதிக ஒலி எழுப்பும் உயிராகக் கருதப்படுவது இறால்கள்தான். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அவையும் மவுனித்துப் போவதற்கான சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன. ஏன்? கடலில் அதிகரித்து வரும் கரியமில வாயுவால், நீரின் ஒலிப்புலன்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால், இறால்களால் ஒலி எழுப்ப முடிவதில்லை. உணவு தேட, இருப்பிடத்தை அமைக்க, மற்ற இரைகொல்லிகளிடமிருந்து தப்பிக்க என அனைத்து விஷயங்களுக்கும் இறால்கள் தங்களுடைய ஒலியை மட்டுமே நம்பியிருக்கின்றன. ஒலி எழுப்ப முடியாமல் இறால்களின் எண்ணிக்கை குறைந்துபோனால், உயிர்ச்சங்கிலியில் ஏற்படும் சிக்கலால் கடலில் உள்ள இதர உயிரினங்களின் எண்ணிக்கையையும் அது பாதிக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

புரதக் குறைவு, தேனீ அழிவு

உலகம் முழுக்கத் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவருவது நாம் அறிந்ததுதான். அதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், சமீபத்தில் புதிய காரணம் ஒன்று கண்டறியப்பட்டிருக்கிறது. தேனீக்களுக்கு முக்கிய உணவு பூந்தேன் என்று நினைத்துக் கொண்டிருக் கிறோம். பூக்களின் மகரந்தமும் தேனீக்களின் முக்கிய உணவுதான். தேனீக்களுக்கு இயற்கைப் புரதம் மகரந்தத்தின் வழியாகவே கிடைக்கிறது. ஆனால், சமீபகாலமாக வளிமண்டலத்தில் கரியமில வாயு அதிகரித்துவருவதால், மகரந்தத்தில் உள்ள புரதத்தின் தரம் குறைந்துவருகிறது. இதனால் தேனீக்களுக்குத் தேவையான நோய் எதிர்ப்புத் திறன் கிடைப்பதில்லை. தேனீக்களின் வாழ்நாள் குறைவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in