Published : 16 Nov 2019 10:10 AM
Last Updated : 16 Nov 2019 10:10 AM

ஊர் கூடிப் பொது விவசாயம்

ராமநாதபுரம் மாவட்டம் புளியங்குடியில் ஊர் கூடிப் பொது விவசாயம் செய்துவருகின்றனர். இந்தக் கிராமத்துக்கு 5 ஏக்கர் பொது நிலம் இருக்கிறது. இந்தப் பொது நிலத்தில் வீட்டுக்கு ஒருவர் என்ற ரீதியில் வேலை செய்கின்றனர். ஊர்ப் பொது நிதியிலிருந்து எடுத்து, உழவு செய்தல், விதைத்தல், களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல் போன்ற பணிகளைச் செய்கின்றனர். இதில் கிடைக்கும் வருமானத்தை கோயில் திருவிழா போன்ற ஊர்ப் பொதுக் காரியங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். நாளேர் சித்திரைத் திருநாளில் இவர்கள் விதை, விதைத்துத் தங்கள் பணிகளைத் தொடங்குகிறார்கள்.

மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே முதியனூரில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கிப் பெண் யானை உயிரிழந்துள்ளது. நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச் சோளத்தை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக சுற்றிலும் மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பக்கமாக வந்த பெண் யானை நிலத்தில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. மின்மோட்டாருக்கு வழங்கப்படும் உயர் அழுத்த மின்சாரத்தை சட்டவிரோதமாக வேலிக்கு அளித்ததால்தான் யானை உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது.

செயற்கை கருவூட்டல் அதிகரிக்க நடவடிக்கை

அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் செயற்கை கருவூட்டும் முறை 70 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் அதுல் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

தற்போது 30 சதவீதத்துக்கும் குறைவாகவே செயற்கை கருவூட்டும் முறை பயன்பாட்டில் உள்ளது. இதை அதிகரிப்பதற்கான பணிகள், செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டுள்ளன. 50 சதவீதத்துக்கும் குறைவாக செயற்கை கருவூட்டல் செய்யப்படும், 600 மாவட்டங்களை கண்டறிந்து, அவை ஒவ்வொன்றிலும் 100 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு கிராமத்திலும், 200 கால்நடைகள் வீதம் தேர்வு செய்து, செயற்கை கருவூட்டம் செய்வது அரசின் திட்டம். இது முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கரும்புக்கு மாற்றாக சுகர் பீட்

கரும்புக்கு மாற்றாக சுகர் பீட் என்னும் பயிர், கரும்பு ஆராய்ச்சி மையத்தில் சோதனை முறையில் பயிரிடப்பட உள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் குமார் இதைத் தெரிவித்துள்ளார். கரும்பு 10 மாத பயிராக உள்ளதால் உற்பத்திச் செலவு அதிகம் தேவைப்படுவதாக உள்ளது. இதற்கு மாற்றாக குறைந்த உற்பத்திச் செலவு தேவைப்படக்கூடிய சுகர் பீட்டைச் சோதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 1-ம் தேதி முதல் சோதனை முறையில் பயிரிடப்பட உள்ளது. சோதனை வெற்றிபெறும் பட்சத்தில் உழவர்களுக்கு இந்தப் பயிர் பரிந்துரைக்கப்படும். ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளில் இந்த சுகர் பீட் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

- தொகுப்பு: விபின்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x