Published : 05 Oct 2019 10:45 AM
Last Updated : 05 Oct 2019 10:45 AM

சூழலியல் கல்வியாளர்

சூழலியல் கல்வியாளர்

சு. அருண் பிரசாத்

அஞ்சலி: வே. தட்சிணாமூர்த்தி

தமிழகத்தைச் சேர்ந்த சூழலியலாளர் வே.தட்சிணாமூர்த்தி, தேசிய அளவில் முக்கிய சூழலியல் செயற்பாட்டாளார்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர். நேஷனல் ஜியோகிராபிக் சொசைடியின் அங்கீகாரம் பெற்ற கல்வியாளரான இவர், உடல்நலக் குறைவு காரணமாக அக்டோபர் 1 அன்று சென்னையில் காலமானார்.
தட்சிணாமூர்த்தியின் நீண்டகால நண்பர்களான ‘உயிர்’ இதழின் ஆசிரியர் ஏ. சண்முகானந்தமும், சூழலியலாளர் சு. பாரதிதாசனும் அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்: “நகர்புறத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இயற்கைமீது உருவான காதலால் சூழலியல் செயல்பாடுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள பிணைப்பை, இயற்கைக்கும் மொழிக்கும் உள்ள நுட்பான உறவை உணர்ந்திருந்த தட்சிணாமூர்த்தி, குழந்தைகளுக்கு தாய்மொழியில் சூழலியலைக் கற்பிப்பதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்; அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். மரங்களைப் பற்றிய அவருடைய தொகுப்பு பிரமிக்கச் செய்யும்; அற்புதமானப் புகைப்படக் கலைஞராகவும் திகழ்ந்த அவர் ஒரு பன்முக ஆளுமை!”
“தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக பளியர் பழங்குடி மக்களை ஆய்வு செய்திருந்த தட்சிணாமூர்த்தி, பழங்குடிகளைப் பற்றிய தவறான புரிதல்களைக் களைய ‘மண்ணாங்கட்டி’, ‘மரமண்டை’, ‘காட்டான்’ போன்ற பெயர்களில் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்; ஒவ்வொரு திணையில் உள்ள மாணவர்களையும் ஒன்றிணைத்து மற்ற திணைகளுக்கு அவர்களை அழைத்துச் சென்று அதுகுறித்த முழுமையான புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பது அவருடைய கனவுத் திட்டங்களுள் ஒன்றாக இருந்தது. இளம் வயதிலேயே அவர் மறைந்தது சூழலியலுக்கும் பசுமை இலக்கியத்தும் ஈடுசெய்யமுடியாத இழப்பு.”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x