Published : 26 Jul 2019 06:10 PM
Last Updated : 26 Jul 2019 06:10 PM

எது இயற்கை  உணவு 13: இயற்கை வேளாண் பொருளை உறுதிப்படுத்துவது எப்படி?

அனந்து 

இயற்கை வேளாண் விளைபொருட்கள் உண்மையிலேயே இயற்கையாகவும் வேதிப்பொருட்கள் இன்றியும் விளைவிக்கப்பட்டனவா என்பதை ஒரு நுகர்வோராக எப்படிக் கண்டறிவது?
இன்று நஞ்சற்ற‌ இயற்கை உணவு, ‘ஆர்கானிக் உணவு' என்ற பெயரில் பெரிதும் பிரபலமடைந்தும் பெருகியும் வருகிறது. ஆனால், ஆர்கானிக் என்ற அடையாளத்துடன் தவறான ஆட்களும் பொருட்களும் சந்தைக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன‌. இயற்கை உணவுச் சந்தை என்பது மிகவும் சமீபத்திய வளர்ச்சி, எனவே, இதில் பல திறந்தமுனைகள் உள்ளன.

அதனால் கட்டுப்பாடு என்பது முக்கியமாகிறது. அந்தக் கட்டுப்பாடு சுய கட்டுப்படாகவும், தரம் நிறைந்த தன்னார்வ நடவடிக்கையாகவும் இருந்தால் நல்லது. அதேநேரம் இயற்கை உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாடு அரசால் கொண்டுவரப்பட்டால், அதில் தற்போது பங்கேற்றிருக்கும் அனைத்துத் தரப்புப் பங்குதாரர்களையும் உள்ளடக்கியதாகவும், இயற்கை உழவர்கள், நுகர்வோர், விற்பனையாளர்கள் ஆகியோரிடம் கலந்து பேசிய பிறகும் கொண்டுவரப்பட்டதாக இருக்க வேண்டும்.

அந்தக் கட்டுப்பாடு கேள்விக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால், FSSAI எனப்படும் இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் ‘இயற்கை உணவுப் பொருள்' என்ற அடையாளத்துடன் விற்பனைக்கு வரும் பொருட்கள் அனைத்தும், மூன்றாம் தரப்புச் சான்றிதழ் (Third Party certification) பெற்றதாக இருப்பது அவசியம் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டுவந்திருக்கிறது. சான்றிதழ் வழங்கும் நிறுவனங்களின் மூலமோ பரஸ்பர குழுச் சான்றிதழ் (PGS) மூலமோ இந்தச் சான்றிதழ்கள் பெறப்பட வேண்டும் என்றும் வகுத்துள்ளது.

இது ஒரு முறையான கட்டுப்பாடு அல்ல. இது சான்றிதழ் அளிக்கும் தனியார் நிறுவனங்களின் வருமானத்தைப் பெருக்குவதில்தான் போய் முடியும். இயற்கை உணவுப்பொருள் சார்ந்த தவறுகளைக் களைவதாக இருக்காது, அதுவே அந்தத் தனியார் நிறுவனங்களின் குறிக்கோளாகவும் இருக்காது. நம்மைப் போன்ற மூன்றாம் உலக நாட்டில் இந்தக் கட்டுப்பாடுகளை மீறி, தவறுகள் செய்வது எளிது.

இயற்கை உணவுப் பொருளுக்குச் சான்றிதழ் என்பதும், அதிலும் மூன்றாம் தரப்பு சான்றிதழ் (Third party Certification) என்பது பல ஓட்டைகளும் கேள்விகளும் நிறைந்தது. ஏமாற்றுவதற்கான பல வழிகளை உள்ளடக்கியது. சந்தையில் போலிகள் உலா வர வசதியான, சர்ச்சைகள் நிறைந்த, சுய ஆதாயம் பெறும் அம்சங்கள் (Conflict of interest) நிறைந்த ஒரு முறை இது. அதனால் இந்தச் சான்றிதழை மட்டுமே நம்பி, இயற்கை உணவுப் பொருளை நாம் உறுதி செய்துகொள்ள முடியாது.

பசுமை அங்காடிகளில் பல கேள்விகளை நுகர்வோரே கேட்டு, சரியான பதில்களைப் பெறுவதே சிற‌ந்த வழி. இயற்கை வேளாண் விளைபொருள் எந்த உழவரிடமிருந்து வருகிறது, தாங்கள் விற்பனை செய்வது இயற்கை வேளாண் விளைபொருள்தான் என்பதற்குக் கடைக்காரர் எந்த வகையில் உறுதி அளிக்கிறார் எனப் பார்த்தும் கேட்டும், திருப்தி அடைந்தால் மட்டுமே ஒரு பொருளை வாங்க வேண்டும்.

இயற்கை உழவர்களிடம் வாங்கி, அதை நேரடியாக விற்பனை செய்யும் அங்காடிகளில் பொருளை வாங்குவது நல்லது. ஒரு பொருள் வந்த வழியைக் கண்டறியக்கூடிய தன்மை, வெளிப் படைத்தன்மைதான் (Traceability and transparency) இயற்கை உணவுப் பொருளுக்கு உறுதியான உத்தரவாதமாக இருக்க முடியும்.

மாறாக அரசு வலியுறுத்தும் சான்றிதழ் பெறும் வழக்கம், சிறு உழவர்களையும் சிறு அங்காடிகளையும் கடுமையாகப் பாதிக்கும் என்பதையும் மனத்தில் நிறுத்த வேண்டும்.

கட்டுரையாளர்,
இயற்கை வேளாண் நிபுணர்
தொடர்புக்கு: 
organicananthoo@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x