Last Updated : 25 Jul, 2015 01:39 PM

 

Published : 25 Jul 2015 01:39 PM
Last Updated : 25 Jul 2015 01:39 PM

நம் நெல் அறிவோம்: நேரடி விதைப்புக்கு உவர்முண்டான்

தமிழகத்தில் பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கள் பல பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும், அந்தந்தப் பகுதி மண்ணுக்கேற்ப பாரம்பரிய நெல் ரகங்களும் காலங்காலமாக சாகுபடி செய்யப்பட்டு வந்துள்ளன. அந்த வகையில் உவர் தன்மைகொண்ட நிலங்களிலும் கடலோர உவர்ப்பு நிலங்களிலும் நம் முன்னோரால் சாகுபடி செய்யப்பட்ட நெல் ரகம் உவர்முண்டான்.

நேரடி விதைப்பு

டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்லாது மற்றப் பகுதி உவர் நிலங்களில் சாகுபடி செய்யும் நெல் வகை இது. சிவப்பு நெல், சிவப்பு அரிசி, நூற்றி முப்பது நாள் வயதுடையது. நான்கடிவரை வளரும், சாயும் தன்மை அற்றது. நடவு செய்வதைவிட புழுதி அடித்து நேரடி விதைப்பு செய்வதற்கு ஏற்ற ரகம்.

நிலத்தில் ஆடு, மாடு கிடை அமைத்தல், தொழு உரம் பயன்படுத்துவது அவசியம். நோய், பூச்சி தாக்குதல் முற்றிலும் இருக்காது. ரசாயன உரங்களைப் பயன்படுத்தினால் சாயும் தன்மைகொண்டு மகசூல் பாதிக்கப்படும்.

வீரியமான நெல்

உவர் நிலத்தில் சாகுபடி செய்வதால் ஏக்கருக்குப் பதினைந்து மூட்டை எனக் குறைந்த மகசூலே கிடைக்கும். மகசூல் குறைவு என்பதால், இந்த நெல் ரகத்தைச் சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வருவதில்லை. அதேநேரத்தில் உவர் நிலத்தில் குறைந்த மகசூல் கிடைத்தாலும், முளைப்புத் திறனும் வீரியமும் அதிகமுள்ள ரகம்.

மற்றப் பாரம்பரிய ரகங்களைவிட உவர் நிலத்தில் விளையும் உவர்முண்டான் நெல்லுக்கு மருத்துவக் குணங்கள் அதிகம். இதன் சாதத்தைச் சாப்பிட்டுவந்தால், நோய் எதிர்ப்புசக்தி கூடும். பலவீனப்பட்ட உடலும் பலமாகும்.

நெல் ஜெயராமன் தொடர்புக்கு: 94433 20954

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x