

பாரம்பரிய நெல் ரகங்களில் தமிழகம் கடந்து விவசாயிகளிடையே வரவேற்பு பெற்ற ரகம் சேலம் சன்னா. சேலம் மாவட்டத்தை மையமாகக்கொண்டு பழங்காலத்தில் இருந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த ரகம் தமிழகத்தைவிட கர்நாடக மாநிலத்தில் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
சேலம் சன்னா நெல் ரகம் சிவப்பு நெல், வெள்ளை அரிசி, நடுத்தர ரகம், மத்திய கால ரகம் என எல்லா நிலையிலும் சிறப்பு பெற்றுள்ளது. 130 நாள் வயதுடைய இந்த நெல் ரகம் முன்சம்பா பட்டத்துக்கு ஏற்ற ரகம். இயற்கைச் சீற்றங்களை தாங்கி வளரக்கூடியது. பாரம்பரிய நெல் ரகங்களிலே குள்ளமான பயிர் ரகம். வைக்கோலைவிட நெல் மகசூல் அதிகமாக இருக்கும்.
நேரடி விதைப்பைவிட நடவு செய்வதற்கு ஏற்ற ரகம். இவ்வாறு நடவு செய்வதன் மூலம் அழுகுதல் நோய் தவிர்ப்பு, நோய் எதிர்ப்பு சக்தி பயிருக்கு அதிகரிக்கிறது.
இதன் அரிசி சத்து மிகுந்ததாகவும், சமைப்பதற்கு ஏற்றதாகவும், நுகர்வோர் விரும்பும் வகையிலும் தமிழகத்தில் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் பிரபலமாகிவரும் அரிசி ரகமாக இருக்கிறது.
இதன் மருத்துவ குணம் பற்றி அதிகம் ஆராயப்படவில்லை என்றாலும் சோறு, பலகாரங்கள் என எல்லா வகைகளிலும் பயன்படுத்த ஏற்ற ரகமாக இருக்கிறது. இந்த ரக அரிசிக்கு சந்தை வாய்ப்பும் விற்பனையும் பிரகாசமாக உள்ளது. மாநகரப் பகுதியில் பசுமை அங்காடிகளில் கிடைக்கிறது.
நெல் ஜெயராமனைத் தொடர்புகொள்ள: 94433 20954