Last Updated : 04 Nov, 2014 01:34 PM

 

Published : 04 Nov 2014 01:34 PM
Last Updated : 04 Nov 2014 01:34 PM

கடைசிவரை பிடிபடாத போபால் விஷவாயு குற்றவாளி

போபால் விஷ வாயுக் கசிவு வழக்கின் முதல் குற்றவாளி வாரன் ஆண்டர்சன் இறந்து விட்டார். ஆனால், அவர் இறந்த செய்தி ஒரு மாதம் கழித்து ரகசியமாக வெளியாகி உள்ள விதமே, போபால் விஷ வாயு விபத்தில் அவருக்கு உள்ள பெரும் பங்கைச் சுட்டிக்காட்டுவதுபோல இருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணம் வெரோ கடற்கரையில் உள்ள மருத்துவமனையில் செப்டம்பர் 29-ம் தேதி அவர் இறந்திருக்கிறார். போபால் விபத்துக்குப் பிறகு கைது செய்யப்பட்டு ஜாமீனில் அமெரிக்கா தப்பிச் சென்ற அவர், அதன் பிறகு கனவிலும் இந்தியாவை நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

மோசமான விபத்து

1984-ல் மத்தியப் பிரதேசத் தலைநகரம் போபாலில் டிசம்பர் 2-ம் தேதி இரவும் 3-ம் தேதி அதிகாலையும் அமெரிக்க உர நிறுவனமான யூனியன் கார்பைடில் விஷ வாயுக் கசிவு ஏற்பட்டது. உலகின் மிகவும் மோசமான தொழிற்சாலை விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படும் அந்த விபத்தில் உயிருக்கு ஆபத்தான மீதைல் ஐசோசயனேட் வெளியானது. அரசுப் பதிவுகளின்படி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து போயினர், 5 லட்சம் பேர் காயமடைந்தனர். இந்தத் தொழிற்சாலை ஏற்படுத்திய இழப்புகளுக்கு, இன்றுவரை முறையான இழப்பீடு வழங்கப்படவில்லை. வாழ்வை இழந்த ஆயிரக்கணக்கானோர் 30 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

தப்பிய ஆண்டர்சன்

அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்தவர்தான் வாரன் ஆண்டர்சன். 1984 டிசம்பர் 6-ம் தேதி அவர் கைதுசெய்யப்பட்டார். உடனடியாக ஜாமீனில் வெளிவந்த ஆண்டர்சன், அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார். மத்திய அரசு ஏற்பாடு செய்த ஒரு விமானத்தில் தப்பிச் சென்ற ஆண்டர்சன், அதற்குப் பிறகு இந்திய மண்ணை மிதிக்கவில்லை. மத்திய அரசும் அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

தீராத சீர்கேடு

விபத்துக்குப் பிறகு யூனியன் கார்பைடு நிறுவனத்தை டோ கெமிகல்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டது. ஆனால், இப்போதுவரை யூனியன் கார்பைடு தொழிற்சாலை இருந்த இடத்தில் உள்ள ஆபத்தான ரசாயனக் கழிவுகள் அகற்றப்படவில்லை.

“இன்றைக்கும் போபால் நகரத்தின் நிலமும், நிலத்தடி நீரும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வாரன் ஆண்டர்சன் ஒரு கார்பரேட் கிரிமினல். வாழ்க்கை முழுவதும் ஓடி ஒளிந்து, கடைசியில் தலைமறைவாகவே அவர் இறந்து போனது, அவரைப் போன்ற மற்ற கார்பரேட் கிரிமினல்களுக்குப் பாடமாக அமையும்” என்கிறார் போபால் தகவல், செயல்பாட்டுக் குழுவின் உறுப்பினர் சதிநாத் சாரங்கி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x