

குல்சார்!
'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் இசைக்கு இவர் எழுதிய 'ஜெய் ஹோ' பாடல் ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்தது. பாலிவுட் இயக்குநர்களின் விருப்பப் பாடலாசிரியர். கவிஞர், வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்டவர்.
திரைப் பாடல்கள் எழுதாத நேரத்தில் தனது கவிதைகளால் வசீகரிக்கும் இவர், இந்த ஆண்டு உலகச் சுற்றுச்சூழல் தினத்தில் தான் எழுதிய இயற்கை சார்ந்த கவிதைகளை 'கிரீன் போயம்ஸ்' என்ற பெயரில் தொகுப்பாகக் கொண்டுவந்தார்.எழுத்தாளரும் முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரியுமான பவன் கே.வர்மா அந்தத் தொகுப்பை இந்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
அந்தப் புத்தகத்தில் இருந்து சில பசுமைக் கவிதைகள்...
ஒரு நதியின் கதை
இது ஒரு நதியின் கதை
ஒருநாள் கவிஞனைக் கேட்டது
தினமும் என்னை இரு கரைகளும் சுமக்கின்றன
என்னை வழிநடத்துகின்றன
தினமும் என் முதுகில்
படகுகளை அக்கரைக்குச் சுமந்து செல்கிறேன்
தினமும் இளைஞர்களைப் போல
என் நெஞ்சில் எதையேனும் எழுதுகின்றன அலைகள்
எதுவும் நடைபெறாமல்
எந்த ஒரு நாளேனும் இருக்காதா
ஒரு மாலைப் பொழுதேனும்
எனது உடலைச் சாய்த்துக்கொள்ளவும்
எதுவும் செய்யாமல் சும்மா கிடக்கவும் இயலாதா
வாசித்த பின் அசைவற்று நிற்கும்
ஒரு கவிதையைப் போல...
வனம்
வனம் புகுகையில் எனது முன்னோர்
என்னைச் சூழ்ந்து அணைத்திருப்பது போலிருக்கிறது
பிறந்த குழந்தையாய் என்னை உணர்கிறேன்
மரங்கள் என்னைத் தூக்கி சுமக்கின்றன
பூச்சொறிகின்றன, நீர் தெளிக்கின்றன
மடியில் வைத்துத் தாலாட்டுகின்றன
நான் நடக்கத் தொடங்கிவிட்டதாகவும்
அவர்களைப் போல் ஒரு நாள்
பூமியில் வேரூன்றிச் சூரியனைப் பிடிக்க
நான் முயற்சிப்பேன் என்றும் அவை சொல்கின்றன
மரம் மேலும் சொன்னது:
நீ இப்போதுதான் பூமிக்கு வந்திருக்கிறாய்
நீ அலைந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறேன்
எனது கிளையில் நீ ஏறலாம் இறங்கலாம்
என்னைச் சுற்றி வரலாம்
என்னைவிட்டு ஓடிச் செல்லலாம்
திரும்பி வராமல் போகலாம்
அல்லது அந்த மலைகளின் ஒருபகுதியாய் மாறலாம்
இருந்தும்
உன்னில் ஓடும் நீர்
உன்னில் உள்ள மண்
அவை நாங்கள் தந்தது
என்னில் நீ மீண்டும் விதைக்கப்படுவாய்
என்னிடம் நீ மீட்டுத் தரப்படுவாய்.
மரங்கள்
மரங்கள் சிந்திக்காதபோது
மலர்கள் மலர்ந்தன
அவற்றின் விரல்கள்
வெயிலில் அமிழ்கின்றன
அசையும் கிளைகளில்
எண்ணங்களை எழுதுகின்றன
பல வண்ணங்களில்
பல வார்த்தைகளைப் பதிக்கின்றன
மணத்தால் உரையாடுகின்றன
மனிதர்களை உறவாட அழைக்கின்றன
ஆனால் பாருங்கள்
மணம் வீசும் எதையும்
மறுகணம் கொய்வது
மனித இயல்பு!
நிலாவாசிகள்
நாங்கள் நிலவுக்குப் புதியவர்கள்
காற்றில்லை
நீரில்லை
தூசியில்லை
குப்பையில்லை
சப்தமில்லை
செயலில்லை
புவியீர்ப்பு விசையில்லை ஆதலால்
பாதங்கள் தரை மீதில்லை
எடை பற்றிய உணர்வில்லை
திரும்பிச் செல்வோம்
எவ்வளவுதான் மோசமாய் இருந்தாலும்
நமக்குப் பழக்கமானது பூமிதான்!
இலையுதிர் காலத்தின் வருகை
இதுவரை இலைகள் உதிரவில்லை
இலையுதிர் காலமோ
வெளியில் நின்றிருந்தது
பொன் நிறத்தில்
புத்தனின் காதுகளைப் போன்று
தொங்கிக் கொண்டிருந்த இலைகள்
ஒற்றை வார்த்தைக்காகத் தவமிருந்தன:
'அந்தக் கிளைகளை விட்டு வாருங்கள்