Last Updated : 17 Mar, 2018 10:35 AM

 

Published : 17 Mar 2018 10:35 AM
Last Updated : 17 Mar 2018 10:35 AM

இது நம்ம விலங்கு 07: முட்டை, கறி எல்லாமே கறுப்பு

மிழகத்தில் காணப்படும் கோழி இனங்கள் பெரும்பாலும் முட்டைக்காகவோ இறைச்சிக்காகவோ வளர்க்கப்படுகின்றன. ஆனால், இந்த இரண்டு தேவைகளையும் போதுமான அளவில் பூர்த்தி செய்யும் கோழி இனம், கடக்நாத் கோழிகள். இவற்றின் முட்டையிலும் கறியிலும் அதிக அளவு புரதச் சத்தும் இரும்புச் சத்தும் உள்ளன.

இதன் உண்மையான‌ பெயர் ‘காலாமசி’. அந்தச் சொல்லுக்கு, கறுப்புச் சதை கொண்ட கோழி என்று அர்த்தம். சுவையான, கறுப்பு இறைச்சிக்காக இந்தக் கோழிகள் புகழ்பெற்றவை. இவற்றின் உடலில் மெலனின் அதிகமாகச் சுரப்பதால் கறுப்பு நிறத்தில் இருக்கின்றன. இவற்றின் பூர்வீகம் மத்தியப் பிரதேசம் என்றாலும், தமிழகத்தில் இன்றைக்கு அதிக aளவில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளாக இவை இருக்கின்றன.

இந்தக் கோழியின் தோல், அலகு, கால் விரல்கள், பாதம் போன்றவை சாம்பல் நிறத்தில் இருக்கும். கொண்டை, நாக்கு போன்றவை இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

இவை, முட்டைகளை அடை காப்பதில்லை. எனவே, பழங்குடியின மக்களில் சிலர், வேறு கோழியினங்களைவிட்டு, இவற்றின் முட்டைகளை அடைகாக்க வைக்கின்றனர். இந்தக் கோழிகள் ஆண்டுக்கு 80 முதல் 120 முட்டைகள்வரை இடும். குஷ்டம், சிரங்கு, வாத நோய் போன்றவற்றுக்கு இந்தக் கோழியின் இறைச்சி நல்ல மருந்தாகப் பயன்படுவதாக சித்த மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

இந்தக் கோழி இயற்கைச் சூழலில் வளரும்போது நல்ல நோய் எதிர்ப்பு ஆற்றலுடன் இருக்கும். ஆனால், கூண்டில் அடைத்து வளர்க்கப்படும்போது வாத நோயின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது என்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x