Published : 29 Mar 2019 06:30 PM
Last Updated : 29 Mar 2019 06:30 PM

நெகிழி பூதம் 09: களத்தில் கட்சிகள் காட்டட்டும்

2022-க்குள் தூக்கி எறியும் ஞெகிழிப் பொருட்கள் முற்றிலும் இல்லாத நாடாக இந்தியா மாறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் ஞெகிழிப் பொருட்களுக்குத் தடை நடைமுறையில் உள்ளது. புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸுக்குள் குறைக்கவில்லை என்றால் உலகம் இதுவரை காணாத கடுமையான சூழலியல் பிரச்சினைகளைச் சந்திக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஒரு முறை பயன்படுத்தித் தூக்கி எறியும் ஞெகிழிக் குப்பையை தவிர்க்கும் முதல் படிக்கட்டை கடக்கவே இன்னும் நாம் திணறிக்கொண்டு இருக்கிறோம். சுற்றுச்சூழல் நெருக்கடியை உணர்ந்து கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் சூழலியல் சார்ந்த திருத்தங்களை மேற்கொண்டாக வேண்டும். மாற்றத்தை சாத்தியப்படுத்த வேண்டிய அரசியல் கட்சிகள் இக்கணம் முதலே இதைக் கையில் எடுக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் அரசியல் கட்சிகள் அக்கறை காட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டுமானால், தேர்தல் பிரச்சாரத்திலேயே அவர்கள் அதை நிரூபித்து காட்ட வேண்டும். தேர்தலை சந்திக்கவுள்ள கட்சிகள் பிரச்சாரத்தில் ஞெகிழிப் பொருட்களை தவிர்ப்பதிலும், சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காமல் இருப்பதிலும் காட்டும் அக்கறை அக்கட்சிகளுக்கு மக்களிடையே நல்ல பெயரை பெற்றுத்தர உதவும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுற்றுச்சூழலைக் காப்போம் என்ற வெற்று வார்த்தைகள் இனி வேலை செய்யாது. வாக்கு கேட்கும்போதே தங்கள் செயல்பாட்டில் அதை வெளிப்படுத்த வேண்டும்.

கட்சிகளில் பசுமைக் குழு

அதேபோல மாவட்டம் வாரியாக, பெரிய கட்சிகள் பசுமைப் பிரிவு (Green Wing) ஒன்றை உருவாக்கலாம். இந்தப் பிரிவு பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள், கட்சிக் கூட்டங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள், கூட்டங்களில் உணவு, தண்ணீர் பரிமாறும் பொருட்கள், கட்சி அலுவலகங்கள் - பொதுக்கூட்ட மேடைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் போன்றவை சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்கள் மட்டுமே பயன்படுகின்றனவா என்பதை உறுதிசெய்யலாம். தெர்மோகோல், ஃபிளெக்ஸ் பதாகை, பிரசாரம் - மேடை அலங்கார ஞெகிழிப் பொருட்கள் ஆகியவற்றிலும் கூடுதல் கவனம் தேவை.

தமிழகத்தின் ஞெகிழிப் பொருட்களுக்கான தடையை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய முக்கியமான மாதம் வந்துவிட்டது. தற்போதைய நிலையில் தடை செய்யப்பட பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. எந்த கட்சிக்கு சுற்றுச்சூழல் மீது உண்மையான அக்கறை உள்ளது என்பது அடுத்து வரும் ஒரு மாதத்தில தெரிந்துவிடும்.

கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்
தொடர்புக்கு: krishnan@theyellowbag.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x