Published : 23 Mar 2019 10:08 AM
Last Updated : 23 Mar 2019 10:08 AM

நெகிழி பூதம் 08: தேர்தல் ஞெகிழித் தடை எப்போது?

அடுத்த ஒரு மாதம், நம் கண் முன்னே பல கட்சிகளின் சின்னங்கள், தலைவர்களின் ஒளிப்படங்கள், செய்திகள் தொடர்ந்து காண்பிக்கப்படும். ஒரு சீட்டு கேட்டு அனைத்துக் கட்சிகளும் நம்மை மயக்க பல பிரச்சார வியூகங்களை மேற்கொள்ளும்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் தெருவெல்லாம் ஞெகிழியால் செய்யப்பட்ட கட்சிக் கொடிகள், தெரு முனைகளில் ஞெகிழி ஃபிளெக்ஸ் பதாகைகள், முக்கிய சந்திப்புகளில் பெரிய ஞெகிழிப் பதாகைகள், மேடை முழுக்க ஞெகிழி அலங்காரம், ஞெகிழிப் பொருட்களால் செய்யப்பட்ட கட் அவுட்கள் என்று ஒரு சில நாட்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டு இவையெல்லாம் தூக்கி எறியப்படும்.

மக்காத இந்த ஞெகிழிப் பொருட்கள் குவிந்து கிடக்கும். கட்சித் தொண்டர்களை வெயிலில் இருந்து காப்பாற்ற ‘நான்-வோவேன்' எனப்படும் தடை செய்யப்பட்ட செயற்கை இழையில் செய்யப்பட்ட தொப்பிகள், ஞெகிழித் தாள்களில் உணவுப் பொட்டலங்கள், ஞெகிழி குடிநீர் பாட்டில்கள் என்று எங்கும் எதிலும் ஞெகிழி நிறைந்த தேர்தல் களமாகவே இதுவரை இருந்துள்ளது.

ஆணையத்தின் அறிவுரை

சமீபத்தில் அல்ல, 1999 முதலே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஞெகிழிப் பொருட்களைத் தேர்தல் பிரச்சாரத்தில் தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 1999-ல் முதல்முறையாகக் கொடுக்கப்பட அறிவுரை 2003, 2006, 2016 ஆகிய ஆண்டுகளிலும் அனைத்துக் கட்சிகளுக்கும், அனைத்து மாநில தேர்தல் ஆணையங்களுக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் எழுத்துபூர்வமாக வழங்கியுள்ளது.

ஆனால், இத்தனை ஆண்டுகளிலும் எந்த அரசியல் கட்சியும் இதற்குச் செவி சாய்க்கவில்லை.

இந்த ஆண்டு சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகச் செயலாளர் சி. கே. மிஸ்ரா அனைத்து மாநிலத் தேர்தல் ஆணையர்களுக்கும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஞெகிழிப் பொருட்களைத் தவிர்த்துத் தேர்தலை நடத்தப் பரிந்துரை செய்துள்ளார். இதை ஏற்ற தலைமைத் தேர்தல் ஆணையம், மீண்டும் அதே அறிவுரையை அனைத்துக் கட்சிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், இதைத் தேர்தல் விதிமுறையாக அறிவிக்கவில்லை. இருபது ஆண்டுகளாகக் கொடுக்கப்பட்டுவரும் வெறும் அறிவுறுத்தலாக மட்டுமே உள்ளது.

அறிவுரை - நடைமுறை

தேர்தல் பிரச்சாரங்களில் ஒலி பெருக்கிகளால் ஏற்பட்ட ஒலி மாசைக் கட்டுபடுத்த தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளில் ஒலிபெருக்கியின் பயன்பாடு சார்ந்து பல விதிமுறைகளைக் கொண்டுவந்தது. அதைப் போன்றே தேர்தல் காலத்தில் ஞெகிழிப் பதாகைகளையும், ஞெகிழிப் பொருட்களின் பயன்பாட்டையும் தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் விதிமுறை கொண்டுவந்தால் இத்தனை ஆண்டு வழங்கப்பட்டுவரும் அறிவுறுத்தல், இந்த ஆண்டுமுதலாவது நிதர்சனத்தில் நடைமுறைக்கு வரும். ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம், அதற்குத் தயாராக இருக்கிறதா என்று தெரியவில்லை.

கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்
தொடர்புக்கு: krishnan@theyellowbag.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x