Last Updated : 01 Dec, 2018 10:31 AM

 

Published : 01 Dec 2018 10:31 AM
Last Updated : 01 Dec 2018 10:31 AM

இயற்கையைத் தேடும் கண்கள் 28: குறையும் சீழ்க்கைச் சத்தம்..!

சிறிய சீழ்க்கைச் சிறகி. ஆங்கிலத்தில், ‘லெஸ்ஸர் விசிலிங் டக்’. இவற்றின் ஒலி, சீழ்க்கை அடிப்பதுபோல இருப்பதால் இந்தப் பெயர். இந்தியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசியப் பகுதிகளில் ஈரநிலங்களில் இந்தப் பறவையினத்தைப் பார்க்க முடியும். கிராமப்புறங்களில் உள்ள ஆழம் அதிகம் இல்லாத குளம், குட்டை போன்ற நன்னீர்நிலைகளில் இவற்றைப் பரவலாகக் காணலாம்.

இதர வாத்து இனங்களைப் போல அல்லாமல், இது அவ்வப்போது மரத்தில் ஏறிச்சென்று அமர்ந்துகொள்ளும். ஆகவே, இவற்றுக்கு ‘மர வாத்துகள்’ என்ற பெயரும் உண்டு. இவற்றுக்கு விதைகள்தாம் மிக முக்கிய உணவு. எனவே, தாவர வளம் அடர்ந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளையே இவை தேர்வு செய்யும். இவை எப்போதும் கூட்டம் கூட்டமாகவே திரியும். இவற்றைத் தனித்தனியாகக் காண்பது மிகவும் அரிது. கூட்டம் என்றால் 10, 20 அல்ல. சுமார் 50, 100 எண்ணிக்கைகளில் கூட்டமாகத் திரியும். அப்படிக் கூட்டமாக இருக்கிறபோது, இவை எழுப்பும் ஒலி, சுமார் ஒரு கிலோமீட்டருக்குக் கேட்கும்.

தென்கிழக்கு ஆசியாவில் இவற்றின் எண்ணிக்கை ஓரளவு நன்றாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இந்தப் பறவையை காணும் பகுதிகள் குறைந்துகொண்டே வருகின்றன. அதற்குக் காரணம், வாழிட அழிப்பு. இங்குள்ள ஈரநிலங்கள், ரியல் எஸ்டேட் பசிக்குக் இரையாகி வருகின்றன. அப்படியே ஈரநிலங்கள் இருந்தாலும், அங்கு முன்புபோல தாவர வளம் இல்லை. எனவே, இந்தப் பறவைக்குப் போதிய உணவு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com

தமிழகத்தில் உள்ள பறவையியலாளர்கள் அவசியம் அறியவேண்டிய  செய்தி. ஐந்தாவது ஆண்டாக ‘தமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பு’ இன்றும் நாளையும் (டிசம்பர் 1, 2) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பி.ஏ.சி.ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் பறவையியலாளர்கள் பலர், தங்களின் பறவை நோக்கல் அனுபவங்களைப் பகிர உள்ளனர். மேலும் பறவையியல் தொடர்பான கருத்துரங்குகளும் நடைபெற உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x