Last Updated : 01 Dec, 2018 10:31 AM

 

Published : 01 Dec 2018 10:31 AM
Last Updated : 01 Dec 2018 10:31 AM

சேவல் கொடி 08: போர்ச் சேவல்கள்

வெற்போர் சேவல்களில் சில அரிதாகக் கோழியைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். அதைப் ‘பொட்டமாரி’ என்று அழைப்பார்கள். இவையும் பீலா, யாகுத், பூதி எனப் பல நிறங்களில் உள்ளன.

வெற்போர் சேவல்களில் அதனுடைய உருவ அமைப்புகளை மையப்படுத்தி என்ன என்ன பிரிவுகள் உள்ளன என்பதைப் பார்ப்பதற்கு முன்னர்,  நல்ல சேவலின் (வெற்போர் சேவல்) தோற்றத்தைக் குறித்துப் பார்க்கலாம்.

உயரமாக, விரிந்த மார்புடன், நீண்ட கழுத்துடன் இறகுப் பகுதியில் சதைப்பற்று இல்லாமல், முதுகுப் பகுதி விரிந்து வால் பகுதி வரும்போது குறுகியும் இறுக்கமான உடலமைப்புடன் இருக்கும். தாடைக்குக் கீழ் முடி இருந்தால் அதை ‘கல்வா’ அல்லது  ‘கூவத்தாடிச் சேவல்’ என்று அழைப்பார்கள். அதுபோல் சேவல்கள் தலையில் உள்ள பூவை வைத்தும் மத்திப்பூ, படிடாக்கொண்டை, உச்சிப்பூ

என்றும் வகை பிரிப்பார்கள். அளவில் பெரிய பூ உள்ள சேவல்களைப் போர்களுக்கு உகந்ததாகச் சிலர் கருதுவது இல்லை. காரணம், எதிர்சேவல் பிடிப்பதற்குப் பெரிய பூ ஏதுவாக அமைந்துவிடும்.

அதன் கால்களை அடிப்படை யாகக் கொண்டு பிரம்புக் கால், ஈச்சங் கால், செறிக் கால், பச்சைக் கால் என்றும் பிரிப்பார்கள். வால் மேல்நோக்கி இருந்தால் அது தூக்குவால், அதுவே கீழ்நோக்கி இருந்தால் குத்துவால் என இருவகைப்படுத்துவார்கள். இந்தக் குத்துவால் அமைப்புடைய சேவல்கள் பறந்து தரை இறங்குவதற்குக் கச்சிதமானவை.

கழுத்து எலும்பு, கூடுமானவரை தடிமனாக இருப்பது நல்லது. மெல்லிதாக இருப்பதைச் ‘சாரக்கழுத்து’ என்று அழைப்பார்கள். அவை நல்ல சேவல்கள் என்று கருதப்படுவது இல்லை.

கண்கள் உள்வாங்கி இருப்பது நல்லது. ஒப்பீட்டு அளவில் தமிழக வெத்துக்கால் சேவல்களைவிட, வட இந்தியச் சேவல்கள் சதைப்பற்று அதிகமாக இருந்தாலும் நன்கு செதுக்கப்பட்டது போன்ற உடல்வாகு அவற்றுக்கு இல்லை. முன்னர் பார்த்த நவாபின்  ‘Murga Nama’ வில் குறிப்பிடப்பட்டிருக்கும் சேவல்களின் கழுத்து சீரான உருளை வடிவுடைய இரும்புக்கம்பி போன்ற அமைப்பு உடையது. இன்றும் அந்தப் பகுதி சேவல்களுடைய கழுத்து எலும்பு அமைப்பு அப்படிப்பட்டதாகத்தான் இருக்கிறது.

தமிழக வெத்துக்கால் சேவல்களைப் பொறுத்தமட்டில் சேவல்களுடைய கழுத்து எலும்பு, கணுக்கணுவாக இருப்பதைக் காண முடியும். சராசரியாக 4.5 இருந்து 5.5 கிலோ எடை வரையில் இவை இருக்கும். தொடக்கத்தில் இந்தச் சேவல்களை அதிகம் விற்பனை செய்யாமல்தான் இருந்தனர். குரு வழிப் பயிலுதல் மூலம் கற்றதைத் தங்களுக்குள்ளே தேக்கி வைத்து இருந்தனர்.

கட்டுரையாளர், வளர்ப்பு விலங்குகள் ஆய்வாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x