Last Updated : 25 Aug, 2018 12:30 PM

 

Published : 25 Aug 2018 12:30 PM
Last Updated : 25 Aug 2018 12:30 PM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 97: கண்ணியம் மிக்க கரையான்கள்

உலகில் நன்மை செய்துவிட்டு அதை வெளிப்படுத்தத் தெரியாமல் பலரால் வெறுக்கப்படும் ஓர் உயிரினம் உண்டென்றால் அது கரையான் என்றால் மிகையாகாது. கரையான் பற்றிய பழமொழிகள்அந்த உயிரியை வெறுக்கத்தக்கதாக மாற்றியுள்ளன. மண்புழுக்களுக்கு இருக்கும் மதிப்பு கரையான்களுக்குக் கிடைக்கவில்லை.

இது ஆனால், மாண்புக்குரிய உயிரி.

கட்டுமானத் துறையை வியக்கவைக்கும் திறனைக் கொண்டது கரையான். குறிப்பாகக் கட்டுமான வடிவமைப்புத்துறை. ஏனென்றால் எந்த வெதனக் கட்டுபாடும் இல்லாமல் ஓரிடத்தின் வெப்பநிலையை நிலையாக வைத்திருக்க ஒரு சிறிய உயிரினத்தால் எப்படி முடியும் என்று கையைப் பிசைந்து நின்றனர் கட்டுமான வடிவமைப்புத் துறை வல்லுநர்கள். ஏனெனில், கரையான் புற்றுகளின் உட்புறம் 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை எப்போதும் இருக்கும். அதாவது கரையான் மட்டுமல்ல நாமும் மகிழ்ச்சியாக இருக்க இந்த வெப்பநிலைதான் சிறந்தது; உகந்தது.

எப்படி ஒரு புற்றுக்குள் இந்த வெப்பநிலைக் கட்டுப்பாடு சாத்தியமானது? இந்த அதிசயத்தைச் செய்தது கரையான்களின் கட்டிடக் கலைத் திறன். பல வகையான சுரங்கங்களையும் வழிகளையும் திறப்புகளையும் வைத்துத் தங்களது இருப்பிடத்தை அவை உருவாக்கியுள்ளன. அவ்வப்போது வெளியில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தை உணர்ந்து அதை மாற்றும் வகையில் மண் கொண்டு அடைத்தோ அல்லது திறந்து விட்டோ காற்றின் வரத்தைச் சரிசெய்து வெப்பத்தை நிலைப்படுத்துகின்றன.

அதே நேர வெப்பம் அதிகம் வேண்டுமாயின் கூட்டமாகச் சேர்ந்து தங்கள் உடல் வெப்பத்தைத் தமது இறகுகளால் தேனீக்களைப் போல விசிறி அதிகப்படுத்திக் கொள்கின்றன. கரியஈருயிரகை (கார்பன் டை ஆக்சைடு) வளியை வெளியேற்றியும் இவை வெப்பத்தைச் சீர்செய்யும்.

இந்தச் சின்னஞ்சிறிய உயிரியைப் பற்றி அமெரிக்க இயற்பியல் கழகத்தின் பாய்மத் துனைமவியல் (APS - fluid dynamic) துறை தனது 67-ம் ஆண்டுக் கூட்டத்தில் விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை வழங்கியிருப்பதை வைத்துக்கொண்டே இவை எவ்வளவு இன்றியமையாத வாழ்விகள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

கரையான்களில் அரசன், அரசி, இளவரசி, குட்டி இளவரசி, படைஞர்கள், ஊழியர்கள் என்று ஆறு வகையான சமூக அடுக்குமுறை உள்ளது. ஊழியக்காரர்கள் சிதைப்பது, உணவு சேர்ப்பது என்ற வேலையைச் செய்வர். படைஞர்கள் எதிரிகள் வந்தால் தாக்கும் பணியைச் செய்து கூட்டத்தைக் காப்பார்கள். அரசனும் அரசியும் இணைந்து பல குழந்தைகளை ஈன்று தருவார்கள். இப்படியாக இந்தக் 'குடிகள்' தங்கள் வாழ்வை நடத்துகின்றன.

பொதுவாகக் கரையான் புற்றுகள் நன்கு அரைத்து திணிக்கப்பட்ட மண்ணால் உருவாக்கப்பட்டவை. அந்த மண்ணில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இவ்வாறு திண்ணிய மண்ணால் ஆன சுரங்க வழிகள் வளைந்து நெளிந்து இருக்கும். இவற்றின் வழியாகக் காற்று உள்ளிருந்து வெளியேயும் உள்ளேயும் பயணித்துக்கொண்டே இருக்கும்.

அத்துடன் புற்றின் வாய்ப் பகுதிகளின் சின்னஞ்சிறு துளைகள் வேறு இருக்கும் அவை வெளிப்புறக் காற்றைக் கட்டுப்படுத்தி அதாவது அதிகமான வேகத்துடன் வரும் காற்றைக் கட்டுப்படுத்தி சிறுதுளைவழியாக பீச்சி அடிக்கும், அதனால் வெப்பமான காற்று குளிர்ச்சி அடையும். இதை எண்ணிப் பார்த்தால் ஒரு புல்லாங்குழலுக்குள் காற்று நுழைவதுபோல தோன்றும்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x