

வேளாண் பல்கலைக்கழகங்கள் செய்யாததை, வேளாண் விஞ்ஞானிகள் செய்யாததை, 6ஆம் வகுப்பைக் கூடத்தாண்டாத ஒரு கிராமத்து விவசாயி செய்துகாட்டி, சாதனை புரிந்திருக்கிறார். ஆனால், தனது கண்டுபிடிப்புக்காக தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் கிடைக்காமல் அந்த ஏழை விவசாயி பரிதவித்து வருகிறார்.
வெறும் கால் கிலோ விதை நெல்லை மட்டுமே விதைத்து, ஒரு ஏக்கரில் ஒற்றை நாற்று நடவு செய்து, உயர் விளைச்சல் எடுத்து வருவதே ஆலங்குடி பெருமாள் என்ற அந்த விவசாயியின் சாதனை. இவர், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள ஆலங்குடியைச் சேர்ந்தவர். தனது கண்டுபிடிப்புக்கான அரசின் அங்கீகாரம் கிடைக்காமல் ஏக்கத்தில் தவித்து வருகிறார்.