

சுற்றுலாப் பயணிகளும் ஒளிப்படக் கலைஞர்களும் இந்தியக் காடுகளை நோக்கிக் கூட்டம் கூட்டமாகப் போகிறார்கள். எதற்கு, உலகிலேயே இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் கம்பீர வங்கப் புலிகளைப் பார்ப்பதற்கா? இல்லை, அந்தப் புலிகளைப் படமெடுப்பதற்கு.
இங்கே நீங்கள் பார்க்கும் படத்தில் மகாராஷ்டிரத்தின் தடோபா புலிகள் காப்பகத்தின் நடுவில் காட்டை ஊடறுத்துச் செல்லும் சாலையைக் கடந்து செல்கிறது ஒரு புலி. எப்படியாவது அதைப் படமெடுத்துவிட வேண்டும் என்கிற ஆவலுடன் வாகனங்களில் காத்திருந்த ஒளிப்படக் கலைஞர்களுக்கு மகிழ்ச்சி. நானோ அந்தப் புலிக்குப் பதிலாக, புலியைப் படமெடுப்பவர்கள் மீதே கவனம் செலுத்தினேன்.