

இயற்கை எண்ணிறைந்த அதிசயங்கள் நிறைந்தது. அதைப் புரிந்துகொள்ளப் புகுந்தால், அது நமக்குக் காட்டும் ஆச்சரியங்கள் கணக்கில் அடங்காதவை. இயற்கையை அறிந்துகொள்ள நினைப்பவர் அடிப்படையில் ஒரு துப்பறிவாளராக இருக்க வேண்டும். நம் இயல் தாவரங்களை நெருக்கமாக அறிமுகப்படுத்த முயலும் இந்தத் தொடரை எழுதும் பயணம் எனக்குமே துப்பறியும் பயணத்தைப் போன்றுதான் உள்ளது.
சங்க கால மருதம் எது என்று மூன்றாவது அத்தியாயத்தில் பேசியிருந்தோம். வெள்ளை மருதம், செம்மருதம் சார்ந்து நடைபெறத் தொடங்கியுள்ள விவாதம் குறித்து எழுதியிருந்தேன். அதேபோல் சரியான நெய்தல் மலரைப் பற்றி அறிய முயன்றபோது, அது எவ்வளவு சிக்கலும் பிரச்சினைகளும் நிறைந்தது என்பது புரிந்தது. மற்ற நீர்க்கொடித் தாவரங்களும் நெய்தல் மலரைப் போன்ற நிறம், வடிவத்தைக் கொண்டிருப்பதால், நெய்தலைப் பிரித்தறிவதில் நிறைய பிரச்சினைகள் உள்ளன.