

மாவட்டப் பறவையை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்று எட்டு ஆண்டுகளுக்கு முன் ‘உங்கள் மாவட்டத்தின் பறவை எது?’ [https://tinyurl.com/2mx8sx9s] என்கிற தலைப்பில் ‘இந்து தமிழ் திசை உயிர் மூச்சு’ பகுதியில் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அப்போது, சேலத்தின் பறவையாகப் பாம்புத்தாராவைப் பரிந்துரை செய்திருந்தேன். அண்மையில் அதை நான் மீண்டும் ‘தூசி தட்டியபோது', மாவட்டப் பறவைக்கான காரணிகளும் அளவுகோலும், இன்னும் ஆழமாகவும் வலுவாகவும் அறிவியல் பூர்வமாகவும் இருக்கலாமே என்றெண்ணி, எட்டுக் காரணிகளை முடிவு செய்தேன்.
அவை 1) ஐ.யு.சி.என். நிலை, 2) வாழிடம், 3) ஓரிடவாழ் நிலை, 4) மாவட்டத்தில் பரவல், 5) எளிதில் பார்க்க முடிவது, 6) எளிதில் அடையாளம் காண முடிவது, 7) இந்தியப் பறவைகளின் நிலை அறிக்கையின் மதிப்பாய்வு, 8) பண்பாட்டுத் தொடர்பு. ஒவ்வொரு காரணியின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அவற்றுக்கு அளவீடுகளைக் கொடுத்து, கணக்கிட்டால் ஒரு மதிப்பெண் கிடைக்கும். அதில் அதிக மதிப்பெண் பெறும் பறவைகளை வரிசைப்படுத்தி, மாவட்டப் பறவைக்கான தேர்வை முறைப்படுத்தினேன்.