

‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும்’ எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. முல்லை, குறிஞ்சி நிலப்பகுதிகள் கோடையில் கடும் வெப்பத்தால் வறண்டு போவதையும், அந்த நிலங்களே திரிந்து பாலை நிலமாவதையும் குறிப்பதாக இதற்குப் பொருள் கொள்கிறோம். சங்கத் தமிழ் நிலத்தில் 4 திணைகளே இருந்ததாகவும், பாலை தனி நிலமல்ல என்றும் கூறப்பட்டுவந்தது. தொல்காப்பியமும் இதையே கூறுகிறது.
அதேநேரம், பண்டைச் சங்க நிலம் என்பது இந்தியாவெங்கும் விரிந்திருந்தது என்றும்; நம் முன்னோர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்து, அந்த இடத்தைத் துறந்து வந்துவிட்ட பண்டைய நிலங்களின் நினைவுகளே சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளன என்றும் சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூறுகின்றனர். கவரிமா என்பது திபெத் பகுதிகளில் இருக்கும் சடைமாட்டைக் குறிப்பது. அதேபோல் ஒட்டகம் குறித்தும் சங்க இலக்கியத்தில் குறிப்புகள் இருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து பெரிதும் விலகியிருக்கும் பகுதிகளைச் சேர்ந்த இந்த விலங்குகளின் பெயர் இலக்கியத்துக்குள் வந்ததை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட கருதுகோளை அவர் முன்வைக்கிறார்.