

இந்தியா சீன மக்கள்தொகையைத் தாண்டிவிட்டது. 146 கோடி இந்தியர்களுக்கு உணவும் உறைவிடமும் வழங்குவதற்குப் போதுமான நிலமும் காடும் கடலும் மரபான தொழில் அறிவும் நம் கையில் மீந்திருக்குமா? இல்லாது போனால், நாம் எந்தச் சக்திகளைச் சார்ந்து நிற்க நேரும்? அதன் நிகரவிளைவுகள் என்னவாக இருக்கும்? கொள்கை வகுப்பவர்களை நிலைகுலைய வைக்கும் பெரும் கேள்வி இது.
உணவு உத்தரவாதம் குறித்த நமது விவாதங்கள் பொதுவாக நிலத்தை மட்டுமே மையப்படுத்தியுள்ளன. வேளாண் நிலமானது தனது வழமையான விளைச்சலைத் தரவேண்டுமானால் அதனுடன் காடு, கடல் என்னும் இரண்டு திணைக் கூறுகளும் இணைந்தாக வேண்டும். காடு இருந்தால் மட்டுமே மழை கிடைக்கும்; கடல்தான் மழையைக் கொண்டுவரும் மேகத்தை உருவாக்குகிறது. தவிரவும், கடல் நமக்குமீன் புரத உணவை வழங்குகிறது.