

பாபநாசம் செல்லும் வழியில் அம்பாசமுத்திரம் சாலையின் இருமருங்கிலும் பெரிதாக வளர்ந்திருந்த மருத மரங்களை 10-15 ஆண்டுகளுக்கு முன் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவை வெண்மருது/வெள்ளைமருது மரங்கள். இவைதான் மருதத் திணைக்குரிய மரங்கள் என்கிற பெருமித உணர்வு தோன்றியது. தாவரவியலாளர்களும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும் இதையே சங்க இலக்கிய மருத மரம் எனக் குறிப்பிட்டு வந்தார்கள்.
அதேநேரம், வயலும் வயல் சார்ந்ததுமான மருதத் திணைக்குப் பெயர் வரக் காரணமாக இருந்த மலர் செம்மருது எனச் சில அறிஞர்கள் கூறுகிறார்கள். சங்கப் பாடல்களில் வர்ணிக்கப்படும் குறிப்புகள் செம்மருதுக்கே பொருந்துகின்றன. ‘முடக்காஞ்சிச் செம் மருதின்’ என்று பொருநராற்றுப்படையும் (வரி 189),‘செவ்வி மருதின் செம்மலோடு தாஅய்’ என்று குறுந்தொகையும் (50:2) குறிப்பிடுக்கின்றன. இந்த மரத்தின் பூக்கள் இளஞ்சிவப்பு கலந்த ஊதா நிறத்தைக் கொண்டவை. ஊதா கலந்த செந்நிறம் Mauve எனச் சுட்டப்படுகிறது.