

வசந்த காலத்தின் தொடக்கம் எப்பொழுதும் குதூகலமாகவும், புதுத் தெம்பு அளிப்பதாகவும் இருக்கும். பறவைகளின் குரலொலிகள், குறிப்பாகக் குயிலோசை நாள் முழுக்க ஒலித்தபடி இருக்கும். மைனாவின் குரலொலிகள், பச்சைக்கிளிகளின் பேச்சு, உற்சாகமாகக் கீச்சிட்டுக் கொண்டே ஒரு செடியிலிருந்து அடுத்ததற்குத் தாவும் தேன்சிட்டுகள், தையல்சிட்டுகள் போன்ற பறவைகளைக் காண்பதும், அவற்றின் குரலொலிகளைக் கேட்பதும் மிகவும் ரம்யமானது.
காலங்களில் இனிமையானது வசந்த காலம்தான். பின்பனிக் காலத்திற்கும் கோடைக் காலத்திற்கும் இடையில் ஊரில் உள்ள மரங்களில் புது இலைகளும் பூக்களுமாக, எங்கும் பறவைகளின் கீச்சொலிகள் நிரம்பி இனிமையைப் பரப்பும். காலநிலை மாற்றத்தினால் வசந்த காலம் சுருங்கியும், கோடைக்காலம் நீண்டும் போய்விட்டது. வசந்த காலம் பறவைகளின் இனப்பெருக்கக் காலம் என்பதால் அதிகமாகக் குரலொலிகளை நாம் கேட்கலாம்.