உயிர் மூச்சு
மிரட்டப் போகும் மீன் பஞ்சம் | கூடு திரும்புதல் 33
2017 நவம்பர் ஒக்கி பேரிடரைத் தொடர்ந்து, 2018 ஜனவரியில் கடல் பேரிடர் அபலையரைச் சந்திப்பதற்காக கடலூர், நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடிக் கடற்கரைகளுக்கு ஒளிப்பதிவாளர் வினோத் பரமேஸ்வரனுடன் பயணம் மேற்கொண்டிருந்தேன். ஒக்கிப் பேரிடரின்போது லட்சத்தீவுக் கடலில் தன் கணவரைப் பறிகொடுத்த இலஞ்சியம் என்பவரைத் தேவனாம்பட்டினத்தில் (கடலூர்) சந்தித்தபோது என் கேள்விக்குப் பதிலாக அவர் எதிர்க் கேள்வியைத் தொடுத்தார்: “இந்தக் கடல்ல மீனிருந்தா, அவரு அங்கி ஏம் போவப்போறாரு?”
சரிதான். கடலூர்க் கடலில் ஏன் மீனில்லாமல் போனது? கடல் பேரிடர் அல்லது பெருவெள்ளப் பேரிடரின்போது மட்டுமே செய்திகளில் வருகிற கடற்கரை கடலூர். 2004 சுனாமிப் பேரிடரில் தமிழ்நாட்டிலேயே அதிகம் உயிர்களைப் பறிகொடுத்த கடற்கரை. 2005, 2015 பெருவெள்ளங்களில் இக்கடற்கரை நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
