

தமிழ்நாட்டின் அரிய உயிரினங்களைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பாதுகாக்கவும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புத்தாக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்லுயிர்ப் பாதுகாப்புக்காகத் தமிழ்நாட்டுப் பள்ளி, கல்லூரிகளில் புதுமை களுடன் கூடிய புத்தாக்க மையத்தை நிறுவுவதற்கான திட்டம் தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழுவின் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் (TANII) திட்டத்தின் கீழ் உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனம் (AIWC) மூலம் முன்வைக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் புத்தாக்க மையங்கள் அமைக்கப்பட்டு இயங்கிவருகின்றன.
புத்தாக்க மையங்களுக்கான: முக்கியக் குறிக்கோள்களில் முதன்மையானது, ஒவ்வொரு மையமும் அந்தந்த மாவட்டங்களில் தனித்துவம்மிக்க, இன்றைய கவனத்துக்கு வராத, அழிந்துவரக்கூடிய உயிரினங்களைக் கருப்பொருளாகக் கொண்டு அவற்றின் முக்கியத்துவத்தையும், வாழ்விடச் சிக்கல்களையும் பற்றிப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துச்சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.