

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கைமுறை வேளாண்மை, தற்சார்பு வாழ்வியல் ஆகியவை குறித்த வழிகாட்டலை வழங்கி வந்த ‘தாளாண்மை’ மாத இதழ் இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளூர் வேளாண்மை ஒழுங்குகளிலிருந்து பன்னாட்டுச் சுற்றுச்சூழல் அரசியல் வரைக்கும் வாசகர்களுக்குக் கற்பித்துவந்த ‘தாளாண்மை’, மீண்டும் வெளியாகத் தொடங்கியுள்ளது. அதன் புதிய இதழ் ஜனவரி 2025இல் வெளியாகியுள்ளது.
இதழின் ஆசிரியரான பாமயன் பத்திரிகையாளர், முன்னோடி செயற்பாட்டாளர், இயற்கை வேளாண் நுட்பங்களைக் கண்டறிந்து நாடு முழுவதும் பரப்புபவர் எனப் பல அடையாளங்களைக் கொண்டவர். காலங்காலமாக விதைகள் மீது உழவர்களுக்கு இருக்கும் உரிமையைத் தனிநபருக்கோ, நிறுவனத்துக்கோ சொந்தமாக்குகிற ‘புதுவகைத் தாவரப் பாதுகாப்புத் தேசங்களிடை ஒன்றியம்’ (UPOV) என்கிற அமைப்புக்கும் வளரும் நாடுகளைச் சேர்ந்த உழவர்களுக்கும் இடையே நடந்துவரும் போராட்டத்தை விளக்கும் பாமயனின் கட்டுரை இதில் இடம்பெற்றுள்ளது.