Published : 24 Feb 2018 10:57 AM
Last Updated : 24 Feb 2018 10:57 AM

கடலம்மா பேசுறங் கண்ணு 42: நெத்திலி எஸ்டேட்!

மு

தல் அத்தியாயத்தில் குறிப்பிட்ட ஐஸ்கட்டிக்கு வருகிறேன். உறைபாடக் கருவி (Freezer), குளிர்பதனப் பெட்டி (Refrigerator), பிளாக் ஃபாரஸ்ட், இத்யாதி ஐஸ்கிரீம் பார்லர் யுகத்துக்கு வந்துவிட்டோம். வாழ்க்கையில் ஐஸ் என்பது இல்லாத ஒரு காலம் இருந்தது தெரியுமா?

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் தென்னிந்தியாவில் பனிக்கட்டி புழக்கத்தில் இல்லை. ஆனால் அமெரிக்காவில் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள உலகின் அற்புதமான நன்னீர் ஏரியிலிருந்து அறுத்து எடுக்கப்பட்ட ராட்சத பனிப்பாளங்கள் மரப்பெட்டிகளில் வைக்கப்பட்டு, கப்பலில் பல்லாயிரம் கிலோமீட்டர் கடந்து சென்னைப் பட்டினத்தில் கரையிறக்கப்பட்டன.

2017 தை எழுச்சிச் செய்திகளில் மெரினாவில் ‘ஐஸ் ஹவுஸ்’ என்றொரு இடம் வந்துபோனது நினைவிருக்கிறதா? அங்குதான் பிரிட்டிஷ் காலனிய அதிகாரிகளின் மதுக்கோப்பைகளில் இடுவதற்கென ஐஸ் கியூபுகள், இந்த ராட்சத ஐஸ்கட்டிகளிலிருந்துதான் தயாராயின. பெரும் பஞ்சங்கள் இந்தியாவை ஆட்டிப் படைத்து, உழைக்கும் மக்கள் லட்சக்கணக்கில் கொத்துக்கொத்துக்காகச் செத்துக்கொண்டிருந்த 19-ம் நூற்றாண்டிலேயே இந்தியாவுக்கு ஐஸ் வந்துவிட்டது. ஆனால், சாதாரண மக்களுக்கானதாக அல்ல.

காமராஜர் ஆட்சியில்…

1950-களில் மீன் ஓர் உணவுப்பொருளாக வெகுமக்கள் கவனத்தை ஈர்த்திருக்கவில்லை. ‘மீன் தீட்டு’ என்னும் கருதுகோள் தவிர, மீன் எளிதில் கெடும் பொருள் என்பதும், கெடுவதற்கு முன்னால் தொலைவிடங்களுக்கு அதைக் கொண்டு சேர்க்கும் விரைவு வாகன வசதிகள் இல்லாமையும், அதற்கு முக்கியமான காரணங்கள்.

தானிய உற்பத்தியைப் பெருக்குவது முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதன்மையான முனைப்பாக இருந்தது. நாட்டு மக்களின் புரத உணவுத் தேவைக்குக் கடல்மீன் வளம் ஒரு சிறந்த தீர்வாக முன்வைக்கப்பட்டது, பிற்காலத்தில்தான். இதன் பிறகுதான் தொலை கடலில் மீன்பிடிப்பதற்கு விசைப்படகுகள், மானியம் எல்லாம் வந்தது.

காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் லூர்தம்மாள், மீன்வள (மற்றும் பொதுப்பணித் துறை) அமைச்சராக இருந்த காலத்தில் குளச்சலிலும் தூத்தூரிலும் மீன்பிடி விசைப்படகுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கரையிறங்கிய மீனை ஐஸ்கட்டிகளுடன் விரைவு ஊர்திகளில் தொலைதூரச் சந்தைகளுக்குக் கொண்டு செல்லும் வழக்கமெல்லாம் இதற்குப் பிறகுதான் ஏற்பட்டது.

மடிவலையும் மணல்வெளியும்

நாம் இப்போது உரையாடும் பொருள், மேற்சொன்ன ‘விசைப்படகு – ஐஸ் ஊர்தி’ காலத்துக்கு முந்தைய ஒன்று. அன்று ‘வலைவீசும் காணி’ எனப்படுகிற மணல்வெளிகள் எங்கும் பரந்திருந்தன. கட்டுமரங்கள், படகுகளைக் கரையேற்றி உலர்த்த, ‘வலை உணங்கு குருமணல்’ பரப்பு ஏராளம் இருந்தது. நெத்திலி மீன் கருவாடாக மட்டுமே விலைபெறும். பெருமளவில் கரையிறங்கும் மடிவலை, வலை நெத்திலியை உணக்கி பத்திரப்படுத்துவது பெரும் உடலுழைப்பும் கவனமும் தேவைகொண்ட கலை.

மணல்வெளியை மடிவலைகளுக்கிடையே பங்கிட்டுக்கொள்வதில் சச்சரவுகளும் முளைப்பதுண்டு. மணல்வெளி எங்கும் அள்ளித் தெளிக்கப்பட்டுக் கிடக்கும் நெத்திலி எஸ்டேட் (டீ எஸ்டேட்போல சொல்லிப் பார்த்துக்கொண்டேன்!) எல்லைகள் ஒற்றையடிப் பாதைகளால் வரையறுக்கப்பட்டவை. அதற்கிடையில் ‘கொச்சுக் கயிற்றில்’ பஸ் ஓட்டிச் செல்லும் விடலையர்களின் அனுபவம் சுவாரஸ்யமானது.

(அடுத்த வாரம்:பஞ்ச காலத்தின் பக்கத்துணை!)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x