

வி
ளைந்த தவசங்களைச் சேர்த்து வைக்க மிகப் பெரிய குதிர்களை அன்றைய மக்கள் வடிவமைத்திருந்தனர். ஏணி எட்ட முடியாத உயரம் கொண்ட குதிர்கள் அவை. அதுவும் குமரிக் கண்டத்தைப் போன்ற பழமையான குதிர்கள், அதில் பல நெல் வகைகள் என்று பெரும்பாணாற்றுப்படை மருத நிலக் காட்சியை விளக்கிச் செல்கிறது, இப்படி:
‘ஏணி எய்தா நீள் நெடு மார்பின்
முகடு துமித்து அடுக்கிய பழம்பல் உணவின்
குமரி மீத்த கூடு ஓங்கு நல்இல்
சேறு கலக்கிய நிலம் செறு’
- என்று சிறப்புப் பெயர் பெற்றது. அதாவது நெல்லைச் சேறு கலக்கி நட்டு விளைவிக்கும் முறையைக் கண்டறிந்தனர். நெல் வயல்களுக்குக் கழனி முதலிய பதினாறு சொற்களை சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது. இது மருதத்துக்கு மட்டும் உரியது.
ஆக விளைச்சல் பெருக்கத்தால் மீதம், அதாவது உபரி தோன்றுகிறது. அதனால் வேலைப் பிரிவினைகள் தோன்றுகின்றன. நிலையான படைகள் உருவாகின்றன. இனக்குழுத் தலைவர்களை அழித்து முடி சூடிய மன்னர்கள் தோன்றினர்.
சோழர்களின் கடற்படை உலகப் புகழ்பெற்றது. கூடவே சோழர்கள் கல்லணை முதல் காவிரியில் பதிமூன்று கட்டுமானங்களை உருவாக்கியுள்ளனர் என்பதையும் மறந்துவிடக் கூடாது. வேளாண்மையைப் பெருக்கியதாலேயே சோழப் பேரரசு கங்கை முதல் கடாரம் (மலேசியா) வரை கோலோச்ச முடிந்தது. இன்றைய நமது அரசுகள் வேளாண்மையை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என்பது மிகப்பெரிய சோகம்.
மருதத்தில் நீர் மேலாண்மை மிகவும் அடிப்படையானது. அணைகளைக் கட்டுவது, நீரை முறையாக வழங்குவது முதலிய பணிகள் செப்பமாக நடந்தன. கல்லணை போன்று ஓடும் ஆறுகளில் செய்யப்படும் பணிகள், மழை நீரைத் தேக்கி வைத்து ஏரிகளையும் குளங்களையும் உருவாக்கும் ஏரிப் பாசன முறை என்று அரசுகளின் முதன்மையான பணிகளாக அவை இருந்தன.
‘மன்னனே நீ வரலாற்றில் நிற்க வேண்டுமாயின் ஏரிகளை உருவாக்க வேண்டும்’ என்று அன்றைய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
‘நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே’ என்று குடபுலவியனார் புறநானூற்றில் குறிப்பிடுகிறார்.
(அடுத்த வாரம்: எரிக்கக் கூடாத கழிவுகள்!)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு:pamayanmadal@gmail.com