Last Updated : 21 Oct, 2017 10:27 AM

 

Published : 21 Oct 2017 10:27 AM
Last Updated : 21 Oct 2017 10:27 AM

முதல் நண்பன் 05: வெள்ளை நிறத்திலொரு நாய்

 

ரா

ஜபாளையம் நாய் இனத்தைப் பற்றி அதிகப் பரிச்சயம் உள்ளவர்களும் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர்களும் இந்த நாய்களைக் குறிக்கப் பயன்படுத்தும் பெயர் ‘வெள்ளை மூஞ்சி’.

முதலில் நாயக்கர்கள் மூலமும் பின்பு ராஜூக்கள் மூலமும் இங்கு வந்த இந்த நாய், பெரும்பாலும் பட்டிக் காவலுக்கும் தோப்புக் காவலுக்கும் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக ராஜபாளையம் வட்டாரங்களில் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இந்த நாய்களின் தனித்தன்மை கொண்ட காவல் குணத்தின் காரணமாக அதிகம் வெளியில் பரவத் தொடங்கின.

தேர்ந்தெடுத்த வளர்ப்பு

ஆரம்பத்தில் அதிகம் வெளியூர்களுக்குப் பகிரப்பட்ட நாய்கள் சற்று அழுக்கு வெள்ளை நிறமுடையதாக இருக்க, பிற்காலத்தில் நாய் வாங்க விரும்பியவர்களும் வெள்ளை நிறத்தை மட்டுமே எதிர்பார்க்கத் தொடங்கினர். பின்னர், தொடர்ந்து இதேபோன்ற வெள்ளை நிற நாய்களுடன் மட்டுமே இணை சேர்க்கப்பட்டு, அதன் மூலம் பிறந்த வெள்ளை நிறக்குட்டிகளை மட்டும் பிரித்தெடுத்து, இன்றைய ராஜபாளையம் நாய்கள் உருவாகின.

1950-60-களில் குருசாமித் தேவர் என்பவர், ராஜபாளையம் நாய்களைச் சந்தைப்படுத்துவதில் பெறும் பங்காற்றியவர்களுள் முக்கியமானவர். இன்றைக்கு வெள்ளை ராஜபாளையம் நாய்கள் அதிகளவில் இருப்பதற்குக் காரணம், கடந்த நூறு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவரும் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம்’ (செலக்டிவ் பிரீடிங்) தான்! ஒரே வித்தியாசம், அன்று பழுப்பு நிறமேறிய ராஜபாளையம் நாய்களும் இருந்தன. இன்று, வெள்ளை நிற நாய்கள் மட்டுமே உள்ளன.

பிறகு, 1960-களில் பெத்துநாயக்கர், சிங்கத்துரை ராசா போன்றவர்கள் ஆந்திரத்திலிருந்தும் நாய்களைக் கொண்டுவந்தனர். அவை வெள்ளை நிற ‘முதோல் ஹவுண்ட்’களாகவோ அல்லது ‘மெட்ராஸ் ஹன்ட் கிளப்’களால் வரவழைக்கப்பட்ட ‘கிரே ஹவுண்ட்’களாகக்கூட இருக்கலாம். இதை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், வெள்ளை நிறத்தின் பெருக்கத்துக்கு இவை பெரிதும் உதவின என்பதால்தான்.

வெள்ளையிலும் வேறுபாடு

இன்று ராஜபாளையம் நாய்கள் வெள்ளை நிறத்தில் மட்டும்தான் உள்ளன. வேறு நிறத்தில் இல்லை. அந்த வெள்ளையும், எத்தகைய மாறுபாடுகளுடன் வருகிறது என்பது முக்கியம். லேசான இளம் கோதுமைச் சாயத்துடன் கூடிய பழுப்பு வெள்ளை (அதாவது, அழுக்குப் படிந்தாற்போல) நிற நாய்கள், மற்றொன்று காதுகளின் ஓரத்திலும், கண்களைச் சுற்றியும், அடிவயிற்றிலும், முதுகிலும் சிறு புள்ளிகளுடனோ, திட்டுகளுடனோ வரும் பால் வெள்ளை நாய்கள் என சில வித்தியாசங்கள் உள்ளன.

பழுப்பு வெள்ளை நாய்களுடன் ஒப்பிடும்போது, பால் வெள்ளை நாய்களின் நோய் எதிர்ப்பாற்றல் குறைவானதாகவே இருக்கின்றன. மேலும் பால் வெள்ளை நாய்கள் அதிக உள்ளினப்பெருக்கம் (இன் பிரீடிங்) மூலமாக மட்டுமே சாத்தியமாகின்றன. ஆகவே, அவற்றுக்குக் காது கேளாத குறைபாடு அதிகம் இருகிறது.

அனுபவம் இல்லையேல் ஏமாற்றமே

மிகவும் அரிதாக, 21 நகங்களைக் கொண்டு பிறக்கும் ராஜபாளையம் நாய்க் குட்டிகள், அதிர்ஷ்டத்தின் வரவாகச் சிலரால் நம்பப்படுகிறது. அதேபோல பூனைக் கண்கள் உடைய நாய்களும் (இவற்றை ‘வெள்ளிக்கண்ணு நாய்’ என்கிறார்கள்) அரிதானவை. இந்த நாய்களுக்கு 90 சதவீதம் காது கேட்காது. கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை இந்த நாய்கள்தான் தீர்மானிக்கின்றன.

ராஜபாளையத்திலும் அதை அடுத்த கிராமங்களிலும் 100-க்கும் மேற்பட்டோர், விற்பனை செய்வதற்காக பூனைக்கண் நாய் இனத்தை வளர்க்கின்றனர். அனுபவம் இல்லாமல் நாய் வாங்குவோர், இவர்களிடம் ஏமாறுவதற்கு சாத்தியம் அதிகம். இந்த நாய்களைப் பற்றிய அறிவு உடையவர்கள் நிறைந்த ராஜபாளையம் ஊரை அணுகி, அங்குள்ள கிராமங்களில் நல்ல நாய்களை வீட்டில் வளர்ப்பவர்களைக் காணலாம். அவர்களிடமே நேரடியாகக் குட்டிகளை வாங்கி ஏமாறுவதைத் தவிர்க்கலாம்.

(அடுத்த வாரம்: சிப்பிப்பாறையின் சிறப்பு)
கட்டுரையாளர், நாட்டு நாய்கள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x