Published : 18 Nov 2022 03:41 PM
Last Updated : 18 Nov 2022 03:41 PM

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 25

ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

தமிழ் இலக்கியம் &
தமிழறிஞர்கள் - 1

திருக்குறள்

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். அவரது துணைவியார் வாசுகி. இவர் சமண மதத்தை சேர்ந்தவராக கருதப்படுகிறது. உலகமொழிகளில் உள்ள அறவழி நூல்களில் முதன்மையாக போற்றப்படும் திருக்குறள் சங்க இலக்கியங்களில் பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும். மூன்று பால்களைக் கொண்ட திருக்குறளில் அறத்துப்பாலில் 38 ,பொருட்பாலில் 70, இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்திற்கு பத்து குறள்கள் வீதம் மொத்தம் 1330 குறள்கள் உள்ளன. உலக மொழிகளில் ஏறக்குறைய 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை முதன்முதலாக பொ.ஆ. 1812 இல் பதிப்பித்து தஞ்சாவூரில் வெளியிட்டவர் மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் ஆவார்.

திருக்குறளின் பெருமைகள் குறித்து சான்றோர் பலர் பாடிய தொகுப்பு திருவள்ளுவமாலை ஆகும். திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர். தமிழ்நாட்டில் திருக்குறளின் பெருமையை பரப்பியவர்களில் முக்கியமான தமிழறிஞர்களுள் திருக்குறள் முனுசாமியும்
ஒருவராவார்.

பொ.ஆ.மு. 31 ஐ தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. ஏழு என்ற எண்ணுடன் அதிக தொடர்புடையது திருக்குறள் எனலாம். ஔவையார் கூற்றிலும் ஏழின் முக்கியத்துவம் அறிந்து 'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்' என குறிப்பிட்டுள்ளார் போலும். திருக்குறளை லத்தீன் மொழியில் வீரமாமுனிவரும் ஆங்கிலத்தில் ஜி.யு. போப்பும் மொழிபெயர்த்தனர். திருவள்ளுவரின் மற்ற முக்கிய பட்ட பெயர்கள் : தெய்வப்புலவர், பொய்யில் புலவர், பொய்யா மொழிப்புலவர், பெருநாவலர், செந்நாப்போதார், மாதானுபங்கி.

நாலடியார்

நீதி நூல்களில் திருக்குறளுக்கு அடுத்தபடியாக விளங்கும் நூல் நாலடியார் ஆகும். பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியார் சமண முனிவர்களால் இயற்றப்பட்டது.
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பகுதிகளாக கொண்டுள்ளது. நாலடியாரின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பதுமனார். நானூறு பாடல்களை உடைய நாலடியாரின் மற்றொரு பெயர் நாலடி நானுறு.

சில பழம்பெரும் தமிழ் இலக்கிய நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும்

நூல் ஆசிரியர்
நான்மணிக் கடிகை விளம்பி நாகனார்
பழமொழி நானூறு முன்றுரையனார்

திரிகடுகம்
நல்லாதனார்
இன்னா நாற்பது கபிலர்
இனியவை நாற்பது பூதந்சேந்தனார்
சிறுபஞ்சமூலம் காரியாசான்
ஏலாதி கணிமேதாவியார்
மூதுரை ஔவையார்


கம்பர்

பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். பிறந்த ஊர் தேரெழுந்தூர். திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார். கம்பர் என்பது நரசிங்கத்தை குறிக்கும். கம்பர் இயற்றிய கம்ப ராமாயானத்திற்கு அவர் முதலில் இட்ட பெயர் ‘ராமாவதாரம்’. கம்ப ராமாயணம் ஆறு காண்டங்களை உடையது. அதன் தொடர்ச்சியாக உத்தர காண்டத்தை எழுதியவர் ஒட்டக்கூத்தர். ஒட்டக்கூத்தர் எழுதிய பெரும் சிறப்பு பெற்ற நூல் ‘மூவர் உலா’. கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் ஒட்டக்கூத்தர், செயங்கொண்டார். கலிங்கத்துப்பரணியின் ஆசிரியர் செயங்கொண்டார். கம்ப ராமாயணத்தின் பெரும் பிரிவைக்குறிப்பது காண்டம். சிறு பிரிவைக் குறிப்பது படலம். 'கல்வியில் பெரியவர் கம்பர்', 'கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்' என்ற வரிகள் கம்பரின் புகழுக்கு எடுத்துக்காட்டுகளாகும். அம்பிகாபதி கம்பரின் மகன் ஆவார். அம்பிகாபதி-அமராவதி கதை நாம் அறிந்ததுதான்.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் அவற்றின் ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகளை பட்டியலிட்டு படிப்பது நலம். அனைத்து நூல்களிலும் சேர்த்து ஏறக்குறைய 2280 செய்யுள்கள் உள்ளன. எட்டுத்தொகை அகம், புறம், அகமும் புறமும் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அகமும் புறமும் அமைந்த நூல் பரிபாடலாகும். எட்டாவது நூலான புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு.போப். அகம் எனp பொருள் அமைந்த அகநானூறு களியாற்றினை நிறை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை என மூன்று பிரிவுகளாக உள்ளது. நெடுந்தொகை என அழைக்கப்படும் அகநானூறை தொகுப்பித்தோன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. நானூறு பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகையின் முதல் நூலான நற்றிணை அகவற்பாக்களின் தொகுப்பாகும். நற்றிணை தமிழக வரலாற்று குறிப்புகள் கொண்ட நூலாகும்.

சங்ககால பெண்புலவர்களில் சிறந்து விளங்கிய ஔவையார் குறுநில மன்னன் அதியமான் நெடுமானஞ்சியுடன் நட்பு கொண்டிருந்தார். குறுகிய எண்ணிக்கையுள்ள அடிகளால் அமைந்த 402 பாடல்களை உடைய அகநூலான குறுந்தொகை 205 புலவர்களால் பாடப்பெற்றது. இந்நூல் வழியாக பண்டைய தமிழ் மக்களின் அகவாழ்க்கை , பழக்க வழக்கங்கள், பெண்டிர் பெருமை, இல்லற ஒழுக்கம் ஆகியவற்றைப் பற்றி அறியமுடிகிறது. ஆசிரியப்பாவால் ஆன நான்கடிச் சிறுமையும் எட்டடி பெருமையும் உடைய நூலான குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். 'கற்றறிந்தோர் ஏத்தும் கலி' என போற்றப்படும் கலித்தொகை எட்டுத்தொகை நூல்களில் ஆறாவதாக குறிப்பிடப்படுவது. ஐந்திணை கண்ட அகப்பொருள் செய்யுள்கள் கலித்தொகையில் உள்ளன.

ஐம்பெருங்காப்பியங்கள்

ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்றும் சமண சமயத்தைச் சார்ந்தும் மணிமேகலை, குண்டலகேசி ஆகிய இரண்டும் புத்த சமயத்தை சார்ந்தும் இருக்கின்றன. சிலம்பு எனும் அணிகலனால் கதையை அலங்கரித்து பேரிலக்கிய பெருங்காப்பியம் எனும் சிலப்பதிகாரம் - புகார், மதுரை, வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களுடன் முப்பது காதைகளை உடையது.

சிலப்பதிகாரம் நூல் முழுமைக்கும் குறிப்புரை எழுதியவர் அரும்பத உரையாசிரியர். விரிவாக உரை எழுதியவர் அடியார்க்கு நல்லார். இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுபவை சிலப்பதிகாரம், மணிமேகலை. துறவு வாழ்க்கையைக் கூறும் மணிமேகலையின் மற்றொரு பெயர் மணிமேகலை துறவு ஆகும். 30 காதைகள் உடைய மணிமேகலை தமிழ் இலக்கியத்தின் முதல் சமயக் காப்பியம் எனலாம். மணிமேகலை காப்பியத்தின் பதினாறாவது காதை 'ஆதிரை பிச்சையிட்ட காதை' ஆகும். உரை குறிப்புகளுடன் நன்றாக பதிப்பித்தவர் தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதய்யர். நூல் முழுவதும் தெளிவாக உரை எழுதியவர் ந.மு. வேங்கடசாமி நாட்டார். மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலை (திருச்சிராப்பள்ளி)யில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் சம காலத்தவரான (பொ.ஆ. 2ஆம் நூற்றாண்டு) சீத்தலை சாத்தனாருக்கு தண்டமிழ் ஆசான், சாத்தான் நன்னூற் புலவன் என சிறப்புப் பெயர்கள் உண்டு. மணநூல் என அழைக்கப்படுவதும் ஒளி குன்றாத மணி எனும் பொருள் கொண்டதுமான சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்கத் தேவர் ஆவார்.

தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்
முந்தைய பகுதி
-https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/897899-tnpsc-group-1-simple-notes-for-preparation-part-24-2.html

டி.என்.பிஎஸ்.சி குரூப் 1 தேர்வுகளுக்கு பயிற்சிசெய்வோருக்கு உதவும் வகையில் போட்டித்தேர்வு பயிற்சியாளர் ஜி.கோபாலகிருஷ்ணன் தொகுத்தளித்த ‘டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 எளியமுறைக் குறிப்புகள்’ தொடர் இந்த 25ஆம் பகுதியுடன் நிறைவுறுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்கள் அனைவரும் இந்தத் தொடரின் 25 பகுதிகளையும் நன்கு படித்து பயிற்சிசெய்து அனைவரும் இந்தத் தேர்வுகளில் வெற்றிபெற ஆசிரியர் சார்பிலும் இந்து தமிழ் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x