

மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் போன்ற சமூக சமூக சீர்திருத்த சிந்தனைவாதிகளின் எழுத்துகள் ஒரு மனிதரின் வாழ்க்கையில் எத்தகைய நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கான சமீபத்திய உதாரணம் முனைவர் ராமசாமி மகாலிங்கம். அமெரிக்காவிலுள்ள மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக உளவியல் துறையில் பேராசிரியராக அவர் பணிபுரிந்து வருகிறார். இந்த ஆண்டுக்கான ஹெரால்டு ஜான்சன் விருது அவருக்குக் கிடைத்துள்ளது.
1996 முதல் இருந்து வழங்கப்பட்டு வரும் இந்த விருதினை இதுவரையில் இந்தியாவிலிருந்து எவருமே பெறாத நிலையில் தமிழ் நாட்டைச் சேர்ந்த இவர் பெற்றிருப்பது பெரும் உவகை அளிக்கும் நிகழ்வு. இந்தியா மட்டுமல்ல தெற்கு ஆசியாவிலேயே இந்த விருதினைப் பெறும் முதல் மனிதர் என்கிற பெருமையையும் முனைவர் ராமசாமி மகாலிங்கம் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார்.
தேடி வந்த விருது
சமத்துவம், சமூக நீதியை மையமாகக் கொண்டு பணியாற்றிவரும் பேராசிரியர் முனைவர் ராமசாமி மகாலிங்கம், நிறவெறி - சாதிய மேலாதிக்கம் இரண்டுக்கும் இடையிலுள்ள நுட்பமான தொடர்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டு அதனைக் களையும் பணியினைத் தொய்வின்றி மேற்கொண்டு வருகிறார். இந்த விருது இவரைத் தேடி வந்திருப்பதற்கான காரணமும் அதுவே.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த மகாலிங்கம் பிள்ளை - ராஜம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ராமசாமி மகாலிங்கம். இவருக்கு இரண்டு சகோதரர். ஒரு சகோதரி உள்ளனர். பேராசிரியர் ராமசாமி மன்னார்குடி நேஷனல் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்.
உன்னதமான அங்கீகாரம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்று மேற்படிப்பைத் தொடர அமெரிக்கா சென்றார். அங்கே பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு புத்தகங்கள் பல எழுதியுள்ளார். இவர் அமெரிக்கா சென்ற பொழுது அங்கு நிறவேற்றுமையால் பல சங்கடங்களையும் இன்னல்களையும் அனுபவித்து சாதாரண ஹோட்டல் தொழிலாளியாக பணியாற்றி தற்போது பேராசிரியராக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் கடைநிலை ஊழியர்களான துப்புரவுத் தொழிலாளர்களின் மேம்பாடு தொடர்பான ஆய்விற்காக பிரான்ஸ் சென்று தற்போது ஆய்வு நடத்திவருகிறார். முயற்சியும், உழைப்பும், நல்ல சிந்தனையும் இருந்தால் விருதுதானே வரும் என்பதற்குப் பேராசிரியர் ராம் மகாலிங்கம் வாழ்க்கையே ஓர் எடுத்துக்காட்டு.
மாமேதை மார்க்ஸ், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய மூவரையும் சிந்தையில் கொண்டு பணியாற்றும் பேராசிரியர் ராமசாமிக்கு இவ்விருது கிடைத்திருப்பது என்பது சமத்துவம், சமூக நீதியை நிலைநாட்ட விரும்பும் அனைத்து களப்பணியாளர்களுக்கும் கிடைத்த உன்னதமான அங்கீகாரம்.