

2022ஆம் ஆண்டில் மத்திய தேர்வாணையக் குழு நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்குப் பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக இம்மாதம் 28 வரை விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி மையங்களில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழுநேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
பயிற்சியில் சேர விரும்புகிறவர்கள் தங்கள் கல்வி, வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையக் குழுவின் இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். தகுதியுடைய நபர்கள் 23-01-2022 அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.
அகில இந்தியக் குடிமைப்பணி பயிற்சி மையம் சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் உள்ளது. இங்கே தங்கும் வசதி, நூலக வசதி, உணவு ஆகியவை கட்டணமின்றி வழங்கப்பட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை பயிற்சி மையத்தில் 225 முழுநேரத் தேர்வர்கள், 100 பகுதிநேரத் தேர்வர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வசதி உள்ளது. அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி நிலையங்கள் கோயம்புத்தூர், மதுரையில் தலா 100 முழுநேரத் தேர்வர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு: www.civilservicecoaching.com