Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM

இணையம்வழி சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் படிக்கலாம்

இன்றைய நிலையில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் முழுமையாக இணையவழிக் கற்பித்தலை நம்பியுள்ளன. இது ஒரு பேரிடர்கால ஏற்பாடு மட்டுமே, இயல்புவாழ்க்கைக்குத் திரும்பியதும் பழைய வகுப்பு வழிக்கற்றல் நிலைக்கு மீள்வோம் என்று சில கல்வியாளர்கள் கருதுகின்றனர். ஆனால் கரோனா காலத்துக்குப் பிறகு, பள்ளிக்கல்வியை மரபார்ந்த வகையில் தொடரும் அதேவேளையில், கல்லூரிக் கல்வியில் இணையவழிக் கற்பித்தலை ஊக்குவிப்பது இன்றைய சிக்கல்கள் பலவற்றுக்குத் தீர்வு தரக்கூடும். சொல்லப்போனால், இணையவழிக் கற்பித்தல் மட்டுமே கல்வியை மேலும் ஜனநாயகப்படுத்தும்.

இணையவழிக் கல்வி என்பதை இணையத்தில் இருக்கும் எண்ணற்ற கற்றல் தளங்கள் வழியே கற்றுக்கொள்வது என்று புரிந்துக்கொள்ள வேண்டும். இணையவழிக் கற்றலில் தன்னுடைய புரிதலுக்கு ஏற்ற ஒரு வழிமுறை மூலம் மாணவன் கற்றறிய வாய்ப்பிருக்கிறது என்பதால், அவனுடைய திறன் குறிப்பிடத்தகுந்த அளவு மேம்படும். அவர்களுக்கு இலக்குகளை உருவாக்குவது, தரமான பாடத்திட்டங்களை வடிவமைப்பது, கற்றலுக்கு ஏற்ற தளங்களைக் கட்டமைப்பது, கற்றல்வள ஆதாரங்களாகப் (Learning Resources) பாடங்களை மாற்றுவது, செயல்வழி சார்ந்த தேர்வுகளை நடத்துவது போன்ற வேலைகளில் ஆசிரியர்களும் கல்விநிறுவனங்களும் ஈடுபட்டால் போதும்.

உலகளாவிய வாய்ப்புகள்

மாணவன் தன்னுடைய அறிதலுக்காக ஒரு கல்வி நிறுவனத்தை, ஆசிரியரை நம்பியிராமல், உலகில் இருக்கும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் கற்றல்வள ஆதாரங்களைப் பயன்படுத்த இம்முறை உதவக்கூடும்.

ஸ்டான்போர்டு, கேம்ப்ரிட்ஜ் போன்ற உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் நம்மால் நேரடியாகச் சேர்ந்து பயில முடியாது. ஆனால் அங்கு நடத்தப்படும் பல பாடங்களை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை அந்நிறுவனங்கள் வழங்குகின்றன. தங்களது துறையில் உச்சத்தில் இருக்கும் பேராசிரியர்கள் நடத்தும் பாடங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் அறிவியலை இந்திய நிறுவனங்களில் கற்பதற்கும், ஆண்ட்ரு இங்கிடம் கற்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பது பற்றி அத்துறையினரிடம் விசாரித்தால் புரியும். மரபியல், மூளை நரம்பியல், உயிரித் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல உயர் ஆராய்ச்சித் துறைகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் தங்கள் வகுப்புகளை இணையத்தில் இலவசமாக வழங்குகின்றனர். இவற்றை நாம் இருக்கும் இடத்தில் இருந்தபடி கற்றுக்கொள்ள இயலும். அதற்கான தேர்வுகளையும்கூட

அந்நிறுவனங்களே நடத்திச் சான்றிதழ்களை வழங்குகின்றன. அவற்றை நம்முடைய மதிப்பீட்டு முறைக்கு ஏற்ப (Credit Based) உள்வாங்கிக்கொள்ளலாம்.

எதிர்காலத்தில் இந்தியக் கல்வி நிறுவனங்களை மட்டும் நம்பியிராமல் உலகளாவிய வாய்ப்புகளை நோக்கி மாணவர்கள் நகரவேண்டிய கட்டாயம் உருவாகும். அப்போது இணையவழிக் கல்வி பல சாளரங்களைத் திறந்துவைக்கும்.

இணையம்வழி கற்பிக்கும் தளங்கள்

இணையவழிக் கல்வி வழங்கும் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு, ஐ.ஓ.டி (IOT), மேகக்கணினியம், பைத்தான் போன்ற சமகாலக் கணினி உலகத் தேவைகளுக்கு ஏற்ற வகுப்புகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளன. இப்படிப்புகளை முடித்ததற்கான சான்றிதழ்கள் வேண்டுமென்றால் மட்டும் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு இத்தளங்கள் மிகக்குறைந்த கட்டணமே நிர்ணயிக்கின்றன.

இந்தியாவில் இருக்கும் பல தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இப்படிப்புகளைத் (MOOC – Massive open online course) தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக வைத்துள்ளன. தங்களுக்கு விருப்பமான பாடத்தை, விருப்பமான நேரத்தில் படித்துத் தேர்ச்சியடைய முடியும் என்பதால், மாணவர் மத்தியில் இதற்குப் பெரும் வரவேற்பு உள்ளது.

மேலும் இத்தகைய குறுகிய காலப் படிப்புகளைத் தனியார் நிறுவனங்கள் – குறிப்பாக – மென்பொருள் நிறுவனங்கள் ஊக்குவிக்கின்றன. இந்த இணையவழி வகுப்புகள் ஏற்கெனவே வேலையில் இருப்போருக்கும், வேலை தேடுவோருக்கும் புதிய கதவுகளைத் திறந்துவைக்கின்றன.

கட்டுரையாளர் தொடர்புக்கு:

sarathy.saravanan@gmail.com

‘இந்து தமிழ் இயர்புக் 2021’இல் இதுபோல் இன்னும் பல பயனுள்ள கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 800 பக்கங்கள், விலை ரூ. 250. ஆன்லைனில் பதிவு செய்ய: store.hindutamil.in/publications

புத்தகங்களை அஞ்சல்/கூரியர் மூலம் பெற:

‘KSL MEDIA LIMITED’ என்கிற பெயரில் DD, Money Order, Cheque

அனுப்ப வேண்டிய முகவரி: இந்து தமிழ் இயர் புக் 2021, இந்து தமிழ் திசை, 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.

தொடர்புக்கு: 7401296562 / 7401329402

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x