Published : 12 May 2020 09:12 AM
Last Updated : 12 May 2020 09:12 AM

சேதி தெரியுமா? - ‘காமன்வெல்த் யூத் கேம்ஸ்’ ஒத்திவைப்பு

தொகுப்பு: கனி

மே.1: 2021-ல் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை நடைபெறுவதாக இருந்த ஏழாம் ‘காமன்வெல்த் யூத் கேம்ஸ்’ போட்டி, 2023-ம் ஆண்டுக்குத் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தேதிகளும் காமன்வெல்த் போட்டிகளின் தேதிகளும் ஒன்றாக இருந்ததால், காமன்வெல்த் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு

மே.5: கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் முடக்கப்பட்டதால், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 27.11 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 15 அன்று 6.74 சதவீதமாக இருந்த நாட்டின் வேலைவாய்ப்பின்மை, மே 3 அன்று 27.11 சதவீதமாக அதிகரித்துள்ளது.

3 மாதங்கள் காவல் நீட்டிப்பு

மே.5: பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியின் காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் அலி முகம்மது சாகர், மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சர்தஜ் மதானி ஆகியோரின் காவலும் மேலும், 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.

நுழைவுத் தேர்வுகள் அறிவிப்பு

மே.5: தேசிய நுழைவுத் தேர்வுகளான நீட், ஜே.ஈ.ஈ. (மெயின்ஸ்) ஆகியவற்றுக்கான புதிய தேதிகளை மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் ஜே.ஈ.ஈ. (மெயின்ஸ்) தேர்வுகள் ஜூலை 18 முதல் 23 வரையும், நீட் தேர்வு ஜூலை 26 அன்று நடைபெறும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜே.ஈ.ஈ. (அட்வான்ஸ்டு) தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கின் புதிய பிரதமர்

மே.7: ஈராக்கின் புதிய பிரதமராக முஸ்தஃபா கதிமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் ஏழு மாதங்களாக அந்நாட்டில் நீடித்துவந்து அரசியல் நெருக்கடி முடிவுக்குவந்துள்ளது. அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்களால் 2019 நவம்பரில் அந்நாட்டுப் பிரதமர் அதில் அப்துல் மஹ்தி ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவரான முஸ்தஃபாவை ஈராக் நாடாளுமன்றம் பிரதமராகத் தேர்வுசெய்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் வாயுக் கசிவு

மே 7: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு அருகே உள்ள பகுதியான கோபால்பட்டினத்தில் அமைந்துள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலையில் அதிகாலையில் ஏற்பட்ட ஸ்டைரீன் நச்சு வாயுக் கசிவால் 12 பேர் பலியாகியுள்ளனர். முந்நூறுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x