

அயர், அயர்வு - அயர்ச்சி, தளர்ச்சி எனப் பொருள் தரும் சொல். ‘அயர்ந்த’ என்பதே ‘அசந்த’ எனப் புழங்கு கிறது. அயர்தி – அசதி. இதில், ‘அயர்ச்சி’ என்பதே சரியான சொல், ‘அயற்சி’ என்பது தவறானது.
அது என்ன கால்நடை? - காலால் நடக்கும் ஆடு மாடு களைத்தான் கால்நடை என்கிறோம். மனிதர்களும் காலால் தானே நடக்கிறார்கள் எனில், ‘மனிதர்கள் மனத்தாலும், காலத்தை மீறியும் நடப்பர்’ என்கிறார் கவிஞர் நந்தலாலா. ‘காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ என்ற பாரதி காலத்தில் தொலைப்பேசி இல்லை.
‘அடுத்த நூற்றாண்டில் சோதனைக் குழாய்க் குழந்தை பிறக்கும்’ என்று பெரியார் சொன்னபோது, பலர் அதை நம்பவில்லை. சிந்தனையாளர், மனத்தால் காலம் கடந்து நடந்து விட்டார்கள் அல்லவா? ஆடு, மாடுகள் அப்படி அல்லவே. காலால் மட்டும் நடப்பதால் அவை கால்நடை ஆயின.
உடம்பு - உடலம் - சடலம்: ‘உடம்பு’ என்பதே பழந் தமிழ்ச் சொல் (குறள்-1122, நன்னூல்-59). ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ – திரு மந்திரம். ‘உடல்’, ‘உடலம்’ என்பன இருந்தாலும் இறந்தாலும் சொல்லப்படும் சொற்கள். ஆனால், ‘சடலம்’ அப்படி யல்ல. அது உயிரற்ற உடல், பிணம் என்பதையே குறிக்கும். தமிழில் உயிர், மெய் எனும் சொற்கள் எழுத்து இலக்கணத்தை மீறி, ஆய்வுக்குரிய ஒரு தத்துவ மரபில் அமைந்துள்ளன.
‘மெய்’ என்பது உருவம், ‘உயிர்’ என்பது உள்ளடக்கம். உயிரும் மெய்யும் சேர்வதே உயிர்மெய் என்பது தமிழர்களின் மொழியும் வாழ்வும் இணைந்த கருத்து. ‘க்’ என்னும் மெய்யும் ‘அ’ என்னும் உயிரும் சேர, ‘க’ எனும் உயிர்மெய் எழுத்தின் உருவம் மெய் யிலிருந்தும், ஓசை உயிரிலிருந்தும் வருகிறது அல்லவா.
அழுகணிச் சித்தர், ‘ஊத்தைச் சடலம்’ என்று பாடியிருந்தாலும், உடலுக்கும் உரிய மதிப்பைத் தந்திருப்பதே தமிழ் மரபு. பெரிய பதவியிலோ, பெரும் பணக்காரனாகவோ இருந்தாலும், இறந்தபின் ‘பிணம்’ என்கிற அஃறிணைப் பெயர்தானே சூட்டப்படுகிறது.
உயிரற்ற உடம்பு மட்டுமல்ல, அறிவற்ற குழந்தை யும் அஃறிணை தான் என்கிறது தொல்காப்பியம் (540). உயிருடன், அறிவும் இருந்தால்தான் உயர்திணை. இது வெறும் இலக்கணமா? வாழ்க்கை முறை நுட்பமல்லவா? ‘பேரினை நீக்கிப் ‘பிண’மென்று பேரிட்டு’ (திருமந்திரம்-145).
நிலையாமை சொல்லி, அறவழிப்படுத்தினர் முன்னோர். மெய் என்றால், ‘உடம்பு’ என்றும், ‘உண்மை’ என்றும் இரண்டு பொருள் உண்டு. ‘உடம்பு உண்மையானது’ என்பதை அறியாத பலர், இந்த ‘உண்மை’/’மெய்’யை ‘நிஜம்’/’சத்யம்’ என்கிறார்கள், தமிழ் நுட்பம் அறியாதவரே.
‘காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்கிற கருத்துக்கு எதிராக, ‘காயமே இது மெய்யடா இதில் கண்ணும் கருத்தும் வையடா’ என்கிற பட்டுக்கோட்டையார் கருத்தே தமிழ் மரபுக் கருத்து. இதையே ‘உயிருறும் உடலையும், உடலுறும் உயிரையும் அயர்வறக் காத்தருள்’ என்னும் வள்ளலார் அகவலிலும்(368) காணலாம்.
எனவேதான் ‘ஆளும் வளரணும் அறிவும் வளரணும்’ என்று, ஆள் (மெய்) வளர சத்துணவும், அறிவு (உயிர்) வளரக் கல்வியும் கொடுத்து, மனிதரை உயர் திணையாகவே வளர்க்கிறது தமிழ்ச் சமூக நீதி மரபு.
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com