

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்த நண்பர் கேட்டார் - ‘வாழ்த்துக்களா, வாழ்த்துகளா?’ தமிழ்ப் புத்தாண்டில் ‘ஹேப்பி நியூ இயர்’ சொன்ன ‘கொடுந்தமிழர்’ இடையே, இப்படிக் கேட்டவரை வாழ்த்தினேன். ‘கள்’ விகுதி பழந்தமிழில் இல்லை. ‘ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியோடு ஒட்டி, உயர்திணை ஒருமைக்கே மரியாதைப் பன்மை வந்துவிட்டது’. ‘அமைச்சர் அவர்கள் வருகிறார்கள் என்பது போல. ‘நாள்கள், ஆள்கள், வாழ்த்துகள்’ என இயல்பாகவே எழுதலாம். ‘நாட்கள்’ என்பதற்கு, ‘நாட்பட்ட கள்’ என்று பொருள். எனினும், இப்போது அப்படி யாரும் புரிந்துகொள்வது இல்லை என்பதால் ‘நாட்கள்’ என்பதை ஏற்கலாம்.
‘எத்தன ஆளுக (ஆள்கள்)?’ எனும் சிற்றூர் மக்களிடம் இதைக் கற்கலாம். பரிமேலழகர் முதலாக, தமிழண்ணல் வரை ‘எழுத்துக்கள்’ என்றும் எழுதியுள்ளனர். எழுத்துக்கள் சரியெனில் வாழ்த்துக்களும் சரிதானே? ஆக, ‘நாட்காட்டி-நாள்காட்டி’, ‘வாழ்த்துக்கள்-வாழ்த்துகள்’ இரண்டும் வழக்கத்தில் இருப்பினும், ‘நாள்காட்டியே’ எளிது என்பதைக் கவனத்தில் கொள்ளலாம், ஆங்கிலப் புத்தாண்டு ‘வாழ்த்துகளையும்’ சொல்லலாம்.
பழமுதிர்ச்சோலையா? - பழமுதிர் சோலையா? - ‘ஃப்ருட் ஸ்டால்’ என்பதை, ‘பழமுதிர் சோலை’ எனப் பார்ப்பது மகிழ்ச்சி தருகிறது. பன்னாட்டுப் பண்பாட்டுக் கலப்பில், உலகத் தாய்மொழிகள் பலவும் அழிந்துவரும் சூழலில், இது மகிழ்ச்சிதானே?
முருகாற்றுப் படை, ‘பழமுதிர் சோலை மலைகிழ வோனே’ என்று முடிவடையும். ‘பழமுதிர் சோலையிலே தோழி’ எனும் கண்ணதாசனின் திரைப்பாடலை, சுசிலாம்மா வின் இனிய குரலில் கேட்டு மகிழுங்கள். ‘பழம் உதிர் சோலை’ - கேட்கவே இனிக்கும் பழந்தமிழ்ச் சொல். இதை, ‘பழமுதிர்ச் சோலை’ என்று எழுதுவது முதிர்ச்சியற்ற செயல்.
அண்ணார், அன்னார்? - இறப்புச் செய்தி அறிவிப்புகள், ‘…அன்னாரின் இறுதி ஊர்வலம்..’ என்று வரும். இதையே எழுதும்போது, ‘அண்ணாரின்’ என்பது தவறு. ‘அன்னார்’ என்பது ‘ஏற்கெனவே குறிப்பிட்டவர்’ எனப் பொருள் தரும் சொல். குறள் (667,969,1323), சங்க இலக்கியத்திலும் இச்சொல் வரும். ‘தேம்பாவணி’யில் மட்டும் இச்சொல், 72 இடங்களில் வருவதாகப் பட்டியலைத் தருகிறது தமிழ்மரபு அறக்கட்டளையின் ‘சங்கம்பீடியா’. ‘அண்ணார்’ என்றால் ‘பகைவர்’ என்று பொருள். இறந்தவரை அறிந்தவர், அன்னாரைப் ‘பழிவாங்க’ அண்ணார் என்று சொல்லலாம்.
தேநீர் குடிப்பதா, சாப்பிடுவதா? - தேயிலை நீர் ‘தேநீர்.’ இதைத் ‘தேனீர்’ என்பது சரியல்ல. தேநீரை, காப்பியைக் குடிப்பதா? சாப்பிடுவதா? அருந்துவதா? ‘இடைப் பலகாரம் சாப்பிடுங்க’ - இது, செட்டிநாட்டு மக்களின் மாலைச் சிற்றுண்டியைக் குறிக்கும் அழகு தமிழ் அழைப்பு. இதுதான் சரியானது. பலவகை உணவு வகைகளுக்கான பொதுச் சொல் சாப்பிடுவது.
உண்ணல், தின்னல், கடித்தல், குடித்தல், பருகுதல் உள்ளிட்ட ஏறத்தாழ 40 உணவருந்தும் சொற்கள் தமிழில் உள்ளன. தமிழறிஞர் ஆ.இரா. வேங்கடாசலபதி, ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ என்றொரு நூல் எழுதி வியக்க வைக்கிறார். ‘டீ குடிக்கலாமாக்கா?’, ‘டீ சாப்பிடலாமா சகோ’, ‘தேநீர் அருந்தலாமா நண்பா’ - இவற்றை வாழ்நிலை வழக்கு என்றே ஏற்கலாம்.
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com