

என்னிடம் பேசும் பலரும், கேட்கும் கேள்வி “இது உங்க அப்பா, அம்மா வச்ச சொந்தப் பெயரா, புனைப்பெயரா?” என்பதுதான். “புனைப் பெயரில்லை, புனை பெயர்தான்” என்பது வழக்கம்.
இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. எழுத்தாளர் பலரும் தமது சொந்தப் பெயரை விட்டு, வேறெரு மாற்றுப் பெயரில் எழுதுவார்கள். ஜெயகாந்தன் (முருகேசன்), புதுமைப்பித்தன் (சொ.விருத்தாசலம்), கண்ணதாசன் (முத்தையா), சுஜாதா (ரங்கராஜன்), கந்தர்வன் (நாகலிங்கம்) எனப் புகழ்பெற்றவர், உண்மைப் பெயர் அடைப்புக்குறிக்குள்.
அரசு விதி / கம்பீரம் என இதற்குச் சில காரணம் உண்டு. எனினும் அந்தப் பெயர், புனைந்து கொள்ளும் பெயர் என்பதால் ‘புனை பெயர்’ என்பதுதான் (வினைத் தொகை) சரி. புனைப்பெயர் என்பது தவறு.
கைப்பிடியும் கடைப்பிடியும்: ‘கை பிடி அரிசி’ என்பது தவறு. கையால் ஒரு பிடி எடுக்கும் அளவாலும், ஆதரவாகப் பிடித்துக் கொள்வதாலும் ‘கைப்பிடி’ என்பதே சரி. ‘நல்ல கருத்தைப் படிப்பது மட்டுமல்ல, ‘கடை பிடிக்க’வும் வேண்டும்’ என்பதும் சொல்லளவில் தவறு. கடையைப் போய் எதற்குப் பிடிக்க வேண்டும்? ‘கடைப்பிடி’ என்பதே சரி.
சில்லரையும் சில்லறையும்: முந்நூறு ரூபாய் தந்து, 295 ரூபாய்க்குப் பயணச் சீட்டு வாங்கி, மீதி 5 ரூபாய்க்காக, இரவெல்லாம் தூங்காமல் வருவோர் உண்டு. விழிப்புணர் வைத் தூண்டிவிட்ட நடத்துநர் நடக்கும் போதெல்லாம், காதலன் காதலியைப் பார்ப்பது போலப் பார்த்து, ‘அந்த சில்லரை?’ என்று தனக்கே கேட்காத குரலில், கேட்பவர் உண்டு.
‘சில்லரை’ என்பது தவறு. (இதை அந்த நேரத்தில் சொன்னால், அந்தப் பயணர் நம்மைக் கடித்தே தின்று விடுவார் என்பதால் துணிச்சலோடு இந்து-தமிழ் திசையில் சொல்கிறேன்). ‘ஒரு தொகையை சிலவாக அறுத்து (கூறுபோட்டு) தரப்படுவது சில்லறை. ஆகவே சில்லறைதான் சரியான சொல்’ என்று இதை அழகாக விளக்குவார் தமிழறிஞர் கோ.ஞானச்செல்வன்.
கோரலும் கோறலும்: கோரிக்கையில்தான் ‘கோரல்’ வரும். ‘கோருகிறோம்’ என்றால் ‘விண்ணப் பிக்கிறோம்’ என்பது பொருள். இதைச் சிலர் ‘கோறல்’ என்கிறார்கள். ‘கோறல்’ என்றால் ‘கொலை செய்தல்’ என்று பொருள். (குறள்-321). எழுத்துப் பிழைக்காகக் கொலைப்பழி தாங்கலாமா?
சொரியும் சொறியும்: ஊர்த் திருவிழாவில் ‘பூச்சொரிதல்’ முக்கியமானது. சிரங்கு வந்தால் நம்மை அறியாமலே கைகள் ‘சொறி’யும். பூவைச் சொறிந்து விட்டால் அதற்குக் கூசுமே? சொரிதல் வேறு, சொறிதல் வேறு. ‘சொறி’யில் வரும் வல்லெழுத்தால் சிரங்கை, சிறங்கு என்பதும் தவறு. கவிமணி தேசிக விநாயகர், சிரங்கு வந்து பட்ட சிரமத்தைக்கூட வெண்பாவாய்ப் புலம்பினார் “…சிரங்கப்ப ராயா, சினமாறிக் கொஞ்சம் இரங்கப்பா ஏழை எனக்கு”!
பொரியும் பொறியும்: வீட்டு எலிகளைப் ‘பொறி’ வைத்துப் பிடிக்கிறார்கள். மாலைப் பொழுதினில், அதுவும் மழை நேரம் எனில், காரப் பொரி கடலையை வாய் தேடுகிறது. ‘பொறி’ என்பது ஒருவகை எந்திரம். ‘பொரி’ என்பது காரைக்குடி நகரத்தார் வழக்கில் சொன்னால் ‘இடைப் பலகாரம்’. இடையில் உண்ணும் சிற்றுண்டி – டிஃபன். இந்தச் சொல்லே இனிக்கிறதல்லவா.
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com