

எண்களை 1, 2 என எண்களாகவே எழுதும்போது வராத சிக்கல், ஒன்று இரண்டு என எழுத்தில் எழுதும்போது சிலருக்கு வந்துவிடுகிறது. அதிலும் 10-பத்து, 11-பதினொன்று வரை வராத குழப்பம், 12, 13 எண்களை எழுத்தில் எழுதும்போது ‘பனிரெண்டா, பன்னிரண்டா?’, ‘பதிமூன்றா,பதின்மூன்றா?’ என சந்தேகம் வந்து விடுகிறது. குழப்பமே இல்லாமல் தவறாக எழுதுவதைவிடக் குழப்பம் நல்லதுதான்.
பனிரெண்டு என்பது தவறு, பத்து இரண்டு=பன்னிரண்டு என்று எழுதுவதே சரி. இதேபோல பதிமூன்று என்பதும் தவறு. பத்து மூன்று= பதின்மூன்று என்பதே சரி. இதேபோல, 23ஐ, இருபத்தி மூன்று என்று எழுதுவது தவறு. இருபத்து மூன்று என்பதே சரி. இவ்வாறே இவை போன்ற 33,44,55 போன்ற எண்களையும் எழுதுக. ‘எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபு’ - எந்தப் பொருளை, எந்தச் சொல்லால் எவ்வாறு உயர்ந்தோர் சொன்னார்களோ அவ்வாறே நாமும் சொல்வதே மரபு என்று இதையும் சொல்லிவைத்திருக்கிறார்கள் (நன்னூல்-பொதுவியல்-37).
முன்னூறா முந்நூறா? முன்னூறு என்பது முன் நூறு என்றாகி, முந்திய நூறு என்று பொருள் தரும். எனவே, மூன்று நூறு எனப் பொருள் தரக்கூடிய முந்நூறு என்பதே சரி. நான்கு நூறு – நால் நூறு – நானூறு என்பதே சரி. நாநூறு என்பது தவறாகும். ஐந்து நூறு - ஐந்நூறு என்றே வரும். ஆனால், ஐநூறு என்று தவறாகவே எழுதுகிறார்கள்.
செய்ந்நன்றி என்பதை, செய்நன்றி என்றே இக்கால வழக்கில் எழுதுவதுபோல, பொருள் மாறாத வகையில் இதை ஏற்கலாம் என்பதே என் கருத்து. அதற்காக எட்டு நூறு எண்ணூறு என்பதை என்னூறு என்பது எழுத்துப் பிழையுடன் கருத்துப் பிழையும் சேர்ந்துவிடும்.
ஒன்பது நூறு தொள்ளாயிரம் இதை, தொல்லாயிரம் என்று எழுதுவது தவறு. (ஒன்பது நூறு தொண்ணூறு, ஒன்பது ஆயிரம் தொள்ளாயிரம் என்றுதான் பழைய மரபு இருந்தது – அது தனிப்பெரும் ஆய்வு). இப்போதும் தொள்ளாயிரம் என்பதே வழக்கு.
எண்கள் அனைத்தும் அஃறிணைப் பொருளில் வரும். எனவே, 20 ஆடுகள், 30 மாடுகள் என்பனபோல, 5 பேர், 10 பேர், 100 பேர் என மனிதர்களைக் குறிப்பது தவறு. ஒருவர், இருவர், மூவர், நால்வர், ஐவர், அறுவர், எழுவர், எண்மர், ஒன்பதின்மர், பதின்மர், இருபதின்மர், முப்பதின்மர், நூற்றுவர், ஆயிரவர் என்னும் வழக்கே சரியானது.
ஆயினும், 15,752 பேரை எழுத நேரும்போது, ‘பதினையாயிரத்து எழுநூற்று ஐம்பத்திருவர்’ என நீளும். இதனால் இயல்பாக எழுதும் வேகம் குறைவது நல்லதல்ல. தமிழ் எண்கள் தனித்தனியே சுருக்கமாகவும் கூட்டெழுத்தாகவும் புழக்கத்தில் இருந்ததை இப்போது இழந்துவிட்டோம். அதை மீட்டல் எளிதல்ல. எனவே. 50 பேர் 100 பேர் என்று எழுதுவதை ஏற்கலாம் என்பதே எனது கருத்து.
மூன்று சுழி என்பதைப் பேச்சு வழக்கில் மூணு சுழி என்றும், ஒன்றாம் வகுப்பு என்பதை ஒண்ணாம் வகுப்பு என்றும் எழுதப் பழகிவிட்டோம். மூன்று-மூனு, ஒன்று-ஒன்னு என்றுதான் பேச்சு வழக்கில் வரும். இந்த இரண்டு சுழிகள் எப்படியோ மூன்று சுழிகளாகிவிட்டன. ‘இரண்டு’ எனும் சொல்லில் மூன்று சுழி. ‘மூன்று’ எனும் சொல்லில் இரண்டு சுழி. இதுதான் இனிய தமிழ் விளையாட்டு.
பேச்சு வழக்கு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் சட்டம் இயற்ற முடியாது. எனினும் நமது எழுத்து மரபாவது தெரிந்திருக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு. இளைஞர்களின் மொழியில், ‘செம்மை, சிறப்பு’ (சூப்பர்?) என்பதை ‘செம’ என்பதும் நன்றாகத்தானே இருக்கிறது.
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com