Last Updated : 29 Aug, 2023 06:12 AM

 

Published : 29 Aug 2023 06:12 AM
Last Updated : 29 Aug 2023 06:12 AM

இஸ்ரோவின் சாதனைத் தமிழர்கள்!

கடந்த வாரம் வெற்றிகரமாக 'சந்திரயான்-3’ விண்கலம் நிலவில் தரையிறங்கியதும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) சாதனையைத் தேசமே கொண்டா டியது. சந்திரயான் 1, சந்திரயான் 2, சந்திரயான் 3, மங்கள்யான் ஆகிய விண்வெளித் திட்டங்களின் முக்கியப் பொறுப்புகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இடம்பெற்றது தமிழ்ச் சமூகத்துக்கும் பெருமையாகி இருக்கிறது. இந்தத் திட்டங்களின் பின்னணியில் இருந்த சாதனைத் தமிழர்களை நினைவுகூர்வது அவசியம்.

மயில்சாமி அண்ணாதுரை: 2008ஆம் ஆண்டிலேயே சந்திரயானை இஸ்ரோ நிலவுக்கு ஏவி சாதனைப் படைத்தது. ‘சந்திரயான்-1’ என்றழைக்கப்படும் அந்தத் திட்டத்தின் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை. இவர், கோவை மாவட்டம் கோதாவடி கிராமத்தைச் சேர்ந்தவர். அரசு பள்ளியில் படித்து, அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்து, 1982இல் இஸ்ரோ வில் அடிப்படை ஆய்வாளராகப் பணியில் இணைந்தார். அங்கு சிறப்பாகப் பணியாற் றிய படிப்படியாக முன்னேறி, ‘சந்திரயான்-1’ திட்டத் தின் இயக்குநராக உயர்ந்தார். இதனால், ‘நிலவு மனிதன்’ என்றும் அழைக்கப்படு கிறார்.

குறுகிய காலத்தில், குறைந்த செலவில் வெற்றிகரமாக நிலவில் பாய்ந்த ‘சந்திரயான்-1’ உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. தொடர்ந்து செவ்வாய்க் கோளை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ‘மங்கள்யான்’ விண்கலக் குழுவிலும் பங்காற்றினார்.

அருணன் சுப்பையா: அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மட்டுமே செவ்வாய்க் கோளுக்கு விண்கலன் களை அனுப்பி இருந்த நிலையில், 2013இல் இந்தியாவும் அதில் சேர்ந்தது. ‘மங்கள்யான்’ என்று பெயரிடப்பட்ட அந்தத் திட்டத்தின் இயக்குநராக செயல்பட்டவர் அருணன் சுப்பையா. நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே கோதைச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர். திருக்குறுங்குடி கிராமத்தில் தமிழ் வழியில் பள்ளிப்படிப்பை முடித்து, கோவையில் பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்.

திருவனந்தபுரத்தில் இஸ்ரோ வின் கீழ் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் 1984இல் பணியைத் தொடங்கினார். உழைப்பாலும், முயற்சியாலும் அவருக்கு 2013இல் மங்கள்யான் திட்ட இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முயற்சியிலேயே அந்த விண்கலத்தை வெற்றிப் பயணத்தில் சேர்த்தார். 8 ஆண்டுகள் செவ்வாய் கோளைச் சுற்றிவந்த மங்கள்யான் பல அரிய படங்களை அனுப்பியது. 2022இல் மங்கள்யான் விண்கலத்தின் பயணம் முடிவுக்கு வந்தது.

கே. சிவன்: கடந்த 2019இல் ‘சந்திரயான் 2’ விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டபோது, இஸ்ரோவின் தலைவராக இருந்தவர் கே. சிவன். கன்னியா குமரி மாவட்டம் சரக்கல்விளை என்கிற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாய குடும்பத் தில் பிறந்த சிவன், அரசுப் பள்ளியில் கல்வியைத் தொடங்கி, குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரியாக உயர்ந்தார். மேற்படிப்புகளை முடித்து 1982இல் இஸ்ரோவில் இணைந்தார்.

இஸ்ரோவின் முக்கியத் தயாரிப்புகளான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி, ராக்கெட்டு கள் கட்டுமானம், சந்திரயான் விண்கலம் ஆகிய பணிகளிலும் சிவனுக்கு பெரும் பங்குண்டு. இதனால் ‘இஸ்ரோவின் ராக்கெட் மனிதர்’ என்றழைக்கப்படுகிறார். கடின உழைப்பால் 2018இல் இஸ்ரோவின் தலைவரானார். அவர் தலைவராக இருந்த காலத்தில் 2019இல் ‘சந்திரயான்-2’ விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. எதிர்பாராத விதமாக அத்திட்டம் தோல்வி யில் முடிந்தது. ‘தவறுகளில் இருந்து பாடம் கற்பது மிக முக்கியம்’ எனச் சொன்ன அவர், அதே ஆண்டு ‘சந்திரயான்-3’ திட்டத்துக்கான பணிகளைத் தொடங்கினார்.

பி. வீரமுத்துவேல்: நிலவின் தென் துருவத்தைச் சென்றடைந்த நாடு என்ற பெருமை ‘சந்திரயான்-3’ மூலம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. இந்தப் பெருமைக்குரிய திட்டத்தின் இயக்குநராகப் இருப்பவர் பி.வீரமுத்துவேல். விழுப்புரத்தைச் சேர்ந்த இவர், அரசுப் பள்ளியில் படித்தவர். பள்ளிக் காலத்தில் தான் ஒரு சராசரி மாணவனாக இருந்ததாகச் சொல்லும் அவர், சென்னையில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டயப் படிப்பை முடித்தார்.

பிறகு திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரி (என்.ஐ.டி.)யில் மேற்படிப்பை முடித்தார். வளாக நேர்காணலில் தேர்வாகி கோவையில் வேலை செய்துகொண்டிருந்தபோது, விண்வெளி ஆராய்ச்சியின்மீது ஆர்வம் ஏற்பட்டது. பெங்களூருவில் ‘ஹெலிகாப்டர் டிவிஷனில்’ பணியைத் தொடங்கி பின்பு இஸ்ரோவில் இணைந்தார்.

முதலில் திட்ட பொறியாளர், திட்ட மேலாளராகப் பணிகளைச் செய்து படிப்படியாக உயர்ந்து, இஸ்ரோவின் முதல் நானோ செயற்கைக்கோள் குழுவை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பைப் பெற்றார். ‘சந்திரயான்-2’ திட்டத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றியதைத் தொடர்ந்து ‘சந்திரயான்-3’ திட்டத்தின் இயக்குநராக உயர்ந்து, இன்று நாட்டுக்குப் பெருமைத் தேடித் தந்திருக்கிறார் வீரமுத்துவேல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x