

பத்திரப் பதிவுத்துறையில் கணினி பயன்பாடு வந்தது முதலே, பொதுமக்களுக்கான பல்வேறு சேவைகள் ஆன்லைனில் கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுவிட்டன.
பதிவு நடைமுறையை எளிதாக்க டோக்கன் முறை, எளிமையாக ஆவணங்களை தயாரிககும் வசதி, பதிவு அன்றே பத்திரம் ஒப்படைப்பு, வீடியோ பதிவு வசதி, ஆதார் அடிப்படையில் உண்மைத் தன்மை சரிபார்ப்பு போன்றவை ஏற்கெனவே அமலில் உள்ளன.
இந்நிலையில், வீட்டிலிருந்தபடியே, நாமே ஆவணத்தை உருவாக்கி பதிவுக்கு அனுப்பி, பதிவு செய்து பெறும் நடைமுறையை சமீபத்தில் பத்திரப் பதிவுத்துறை கொண்டுவந்துள்ளது. ஸ்டார் 3.0 ஸ்பிரின்ட் -1 என்ற புதிய மென்பொருள் வாயிலாக இந்த வசதி சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதில், காகிதமில்லா, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.