சூழலியலுக்கு உகந்த நவீன வீடுகள்

சூழலியலுக்கு உகந்த நவீன வீடுகள்
Updated on
3 min read

காலநிலை மாற்றத்தின் பாதகமான எதிர்வினைகள் இன்று மனிதனைப் பேரழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளன. இதனால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாகவோ,புவியின் மீதான அக்கறையின் வெளிப்பாட்டாலோ வேர்களை நோக்கிச் செல்லும் போக்கு மனிதர்களிடம் இன்று அதிகரித்து வருகிறது. இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவு முறை, சூழலுக்கு உகந்த இருப்பிடம் போன்றவை நவீன நாகரீகத்தின் அங்கங்களாக இன்று மாறி வருகின்றன.

உலகமயமாக்கல், பெருகிவரும் மக்கள்தொகை போன்றவற்றால் கட்டுமானத் துறையில் மறுமலர்ச்சி, மணல், சிமெண்ட், இரும்புக் கம்பிகள், தண்ணீர் உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு பெரும் பற்றாக்குறையை உருவாக்கிவிட்டது. முக்கியமாக அதிகரிக்கும் கட்டுமானங்கள், நம் பண்பாடு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் போன்றவற்றிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்தப் பாதிப்புகளிலிருந்து மீளும் வழி குறித்த தேடலில் உருவான தீர்வே சூழலியலுக்கு உகந்த நவீன வீடுகள். நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்காமல், அதே சமயம் இயற்கை வளத்தையும் வீணாக்காமல், நம் பாரம்பரிய கட்டுமான வடிவமைப்பு முறையில், புதிய தலைமுறைக் கட்டிட வடிவமைப்பாளர்களால் கட்டப்படும் இத்தகைய வீடுகள் இன்று அதிகரித்து வருகின்றன.

இந்த வீடுகள், பழைய, மறு சுழற்சிக்குள்ளாகும் பொருள்களைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டப்படுகின்றன. நவீன வடிவமைப்பில், கண்ணைக் கவரும் வண்ணங்களில், பளபளப்பான தளங்களுடன், மிகவும் உறுதியாகவும் இந்த வீடுகள் இருக்கின்றன. நமது பண்பாட்டுடன், மேற்கத்திய வடிவமைப்பை இணைத்து வீடுகளைக் கட்டும் சில கட்டுமான நிறுவனங்கள் இங்கே:

பென்னி குரியகோஸ் சென்னை

குரியகோஸ் தன் வழிகாட்டியான லாரி பேக்கரைப் போன்று, நீண்டகாலம் நிலைத்திருக்கும் பிராந்திய கட்டிட வடிவமைப்பை ஊக்குவிப்பதில் பிரபலமானவர். பண்பாட்டுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தகுந்த வண்ணம், இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, குறைந்த செலவில் வீடு கட்டுவது இவரின் சிறப்பு. பழைய வீட்டுப் பாகங்களின் பயன்பாட்டை இவர் பெரிதும் ஊக்குவிப்பார், இவர் வடிவமைப்பு நன்கு இயற்கை ஒளி நிரம்பியதாகவும் காற்றோட்டம் மிக்கதாகவும் பசுமையானதாகவும் பெரிய முற்றம் கொண்டதாகவும் இருக்கும்.

தண்ணல் ஹேண்ட் ஸ்கல்ப்டட் ஹோம் திருவண்ணாமலை

நாம் வசிக்குமிடம், நம் மனதின் நீட்சி என்பது, இதன் நிறுவனர் பிஜு பாஸ்கரின் நம்பிக்கை. உள்ளூரில் கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டு, குறைந்த செலவில், தகுந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தரமான வீடுகளைக் கட்டுவதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே இவரின் நோக்கம்.

த அரோமா குழு புதுச்சேரி

வீடுகளின் வடிவமைப்பு இயற்கையைப் பூர்த்திசெய்வதாக இருக்க வேண்டுமேயன்றி, அதனுடன் போட்டிப் போடுவதாக இருக்கக் கூடாது. திருப்தி தோஷி என்ற கட்டிடக் கலை வல்லுநரால் நிர்வகிக்கப்படும் இந்த நிறுவனத்தின் உயரிய நோக்கம் இது. புதுச்சேரியைச் சேர்ந்த இவர், உள்ளூரில் கிடைக்கும் ஆட்களையும் பொருட்களையும் கொண்டு, சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதிப்பின்றி, அங்குள்ள வட்டாரக் கட்டிடக் கலை வடிவமைப்பில் வீடுகளைக் கட்டுவதில் புகழ்பெற்றவர்.

யூஜீன் பாண்டாலா கொல்லம்

மண் கலவை, இயற்கைப் பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டு வீடுகள் கட்டுவதில் இவர்கள் மிகவும் பிரசித்தமானவர்கள். மண், சரளைக் கல், கீற்றுக்கட்டு கொண்டு இவர்கள் உருவாக்கும் வீடுகளின் வடிவமைப்பு மிகவும் புத்துணர்வு அளிப்பதாக இருக்கும்.

பயோம் என்விரான்மெண்டல் சொல்யூஷன்ஸ் பெங்களூரு

சித்ரா விசுவநாதன் எனும் கட்டிடக் கலை வல்லுநரால் நடத்தப்படும் இந்த நிறுவனத்தின் வடிவமைப்பு நீண்டகாலம் நிலைக்கக் கூடியது. காலநிலையை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு இவர்கள் கட்டும் வீடுகள் உள்ளன. இயற்கை வளத்தை வீணடிக்காமல், வீடுகளைக் கட்டுவது ரசாயன வண்ணங்கள், சிமெண்ட் கலவைகள் போன்றவை இல்லாமல், வெறும் செம்மண் கலவை, பழைய மரங்கள் ஆகியவற்றைக் கொண்டு வீடுகளை உருவாக்குவதே இவர்களின் சிறப்பு. இவர்கள் உருவாக்கும் வீடுகள் மனதைக் கொள்ளைகொள்ளும். மழை நீர் சேகரிப்பு, சூரிய ஒளி மின்சாரம் போன்றவை இந்த வீடுகளின் இதர சிறப்பு அம்சங்கள்.

காமத் டிசைன் ஸ்டுடியோ புதுடெல்லி

ரேவதி காமாத் என்பவரால் நடத்தப்படும் இந்த நிறுவனம், மண் கலவையாலும் பழைய மரங்களாலும் வீடுகளைக் கட்டிவருகிறது. கைவிடப்பட்ட குவாரியில், அவர் வசிக்கும், வெறும் மண்ணால் கட்டப்பட்ட வீடு, மண் வீடுகளின் மீதான அவரின் காதலுக்குச் சான்றாக உள்ளது

மொஸைக் கோவா

டீன் டி குருஸ் என்பவரால், 2012-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், கோவாவின் பாரம்பரிய கட்டிட வடிவமைப்பில், குறைந்த செலவில், சுற்றுச்சூழலுக்குக் கேடின்றி, வீடுகளைக் கட்டுவதிலும், பழைய பாரம்பரிய வீடுகளைப் புதுப்பித்தலிலும் மிகவும் திறமைபெற்றது.

பெரும் பொறுப்பு

இந்தப் பூமி நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்தப் புவியில் அனைத்து உயிர்களுக்கும், உயிரற்றவைகளுக்கும் அது சொந்தமானது. முக்கியமாக, நமக்குப் பின்வரும் தலைமுறையினருக்கும் இது சொந்தமானது. நம் முன்னோர்கள் இந்த உலகை நமக்குப் பரிசளித்துச் சென்றிருக்கிறார்கள். அதைக் காத்து, பாதிப்பின்றி அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கும் உண்டு. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற இந்த நவீன வீடுகள் நமக்குச் சிறிது உதவும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in