Published : 12 Dec 2015 12:45 PM
Last Updated : 12 Dec 2015 12:45 PM
மழைநீரையும், வெள்ளத்தையும் பெரும்பாலும் பிரச்சினையாகவே பார்க்கிறோம். மழையால் பெரும்பாலான விஷயங்கள் கெட்டுப்போகின்றன என்ற பார்வை உள்ளது. அப்படியானால், மழையை சரியான வகையில் நாம் புரிந்து கொண்டிருக்கிறோமா? நவீன அறிவியல் வளர்ச்சிகள் ஏதும் இல்லாத இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மழை மிகப் பெரிய அளவில் போற்றப்பட்டது.
மழையையும் நீரையும் சிறப்பிப்பதற்காக ‘வான்சிறப்பு’ என்ற அதிகாரத்தை எழுதிய திருவள்ளுவர், கடவுள் வாழ்த்துக்கு அடுத்ததாக இரண்டாவது அதிகாரமாக அதை அமைத்திருப்பதிலிருந்து, அதற்கு அளித்துள்ள முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். உலகம் வாழ, உயிர்ப்புடன் இருக்க அடிப்படைத் தேவை மழைநீர்தான் என்பதை அன்றே அவர் உணர்ந்திருந்ததே இதற்குக் காரணம்.
பூமியில் நீர்
நமது பூமி மூன்றில் இரண்டு பங்கு நீராலும் ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டிருக்கிறது. அந்த மூன்றில் இரண்டு பங்கு நீரில், 96 சதவீதம் கடலில் காணப்படும் உப்புநீர், எஞ்சிய நான்கு சதவீதம் மட்டுமே நன்னீர். இந்த நான்கில் மூன்று சதவீதம் பனிக்கட்டியாக உறைந்திருக்கிறது, ஒரு சதவீதம் மட்டுமே உடனடி தேவைக்கு உகந்த திரவ வடிவில் உள்ளது. இதுவும் பெரும்பாலும் நிலத்தடி நீராக உள்ளது.
நிலத்தில் காணப்படும் நீருக்கு முதன்மை ஆதாரங்கள் இரண்டு: ஒன்று, பனி படர்ந்த மலைகளிலிருந்து கோடை காலத்தில் உருகி வரும் நீர்; மற்றொன்று வான் மழை மூலமாகக் கிடைக்கும் நீர். நீரின் முதன்மை ஆதாரத்தைக்கொண்டு, உலகிலுள்ள நாடுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: 1) மழையை முதன்மை ஆதாரமாகக் கொண்டவை 2) பனி உருகுவதை முதன்மையாகக் கொண்டவை 3) இந்த இரண்டையுமே ஆதாரமாகக் கொண்டவை.
இந்தியா ஓரளவுக்கு மூன்றாவது வகையைச் சேர்ந்தது. அதேநேரம் வடஇந்தியாவைத் தவிர்த்து, நாட்டிலுள்ள பெரும்பாலான மாநிலங்கள் மழையை ஆதாரமாகக் கொண்டவை. அதனால் மழைநீர் சேகரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
நீரைச் சேகரிப்பதே ஒரே வழி
மழையை முதன்மையான நீராதாரமாகக் கொண்டுள்ள நாடுகளில், மழைநீர் சேகரிப்பால் மட்டுமே நீராதாரங்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதுதான் யதார்த்தமான உண்மை. இது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றோ அல்லது நீர்த் தேவைக்கான மாற்று ஏற்பாடோ அல்ல.
மழை நீர் பல்வேறு வகைகளில் இயற்கையாகவும் செயற்கையாகவும் ஆண்டாண்டு காலமாகச் சேகரிக்கப்பட்டு வருகிறது. நதிகள், ஏரிகள், குளங்கள், ஊருணிகள், குட்டைகள் போன்ற பூமியின் மேல் காணப்படும் நீராதாரங்களிலும் நிலத்தடியிலும் சேமிக்கப்பட்டு, நம்முடைய அன்றாட தேவைகளுக்குப் பயன்படுகிறது.
மெத்தனம்
கடந்த இருபது ஆண்டுகளாகவே நீராதாரங்கள் அளவை மீறிப் பயன்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் தொழிற்சாலை, வீடுகள், விவசாய நிலங்களிலிருந்து வரும் கழிவு நீர் நீராதாரங்களில் செலுத்தப்படுகிறது. அதனால் நம்முடைய பெரும்பாலான நீராதாரங்கள், நன்னீர் தேவைக்குப் பயன்படக்கூடிய நிலையில் இப்போது இல்லை.
ஒருபுறம் நீர்த் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், கிடைக்கும் நன்னீரின் அளவோ குறைந்துகொண்டே வருகிறது. இது எதிர்காலத்தில் வரப்போகும் தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கு முன்னெச்சரிக்கையாக அமைகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு முக்கியப் காரணம், அது பெரும்பாலும் இலவசமாகக் கிடைப்பதால் நம்மிடம் காணப்படும் மெத்தனப் போக்குதான்.
(அடுத்த வாரம்: நமக்கு எதற்கு மழைநீர் சேகரிப்பு?)
கட்டுரையாளர், மழை இல்லத்தின் இயக்குநர்
தொடர்புக்கு: sekar1479@yahoo.co.in / 96770 43869
மழைநீர் சேகரிப்பு தொடர்பான அனைத்து விவரங்கள், இலவச ஆலோசனைகளுக்குச் சென்னை மந்தைவெளியில் உள்ள மழை இல்லத்தை அணுகலாம்:
மழை இல்லம், 4, மூன்றாவது டிரஸ்ட் லிங்க் தெரு, மந்தைவெளி (பட்டினப்பாக்கம் அருகில்), சென்னை - 600028. இணையதளம்: >www.raincentre.net
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT