Last Updated : 21 Nov, 2015 11:45 AM

 

Published : 21 Nov 2015 11:45 AM
Last Updated : 21 Nov 2015 11:45 AM

பொன்விழா கொண்டாடும் சுரங்கப் பாதை

சுரங்கப் பாதைகள் மட்டும் இல்லாவிட்டால் பரபரப்பான சென்னையில் சாலைகளைப் பாதசாரிகள் கடப்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாது. அதுவும் அண்ணாசாலை போன்ற, வாகனங்கள் எப்போதும் சீறிப் பாய்ந்துகொண்டிருக்கும் ஒரு சாலையின் நிலையை நினைத்தாலே கதி கலங்குகிறது. அப்படியொரு இடத்தில் சுமார் ஐம்பது ஆண்டுகளாக சேவையாற்றிவருகிறது சுரங்கப்பாதை ஒன்று.

அது, எல்லிஸ் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை ஆகிய மூன்றும் சந்திக்கும் இடத்தில் உள்ள ரவுண்டானா சுரங்கப் பாதை. நெடுஞ்சாலைத் துறையினரின் பதிவேடுகளில் ‘ரவுண்டானா சுரங்கப் பாதை’ என்னும் இந்தப் பெயரால்தான் இந்தச் சுரங்கப் பாதை குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏனெனில் இந்தச் சுரங்கப் பாதை இருக்கும் இடத்தில் இதற்கு முன்பு ரவுண்டானா இருந்தது. மேலும் இதன் அருகில் ரவுண்டானா ஐலண்ட் என்னும் கட்டிடமும் இருந்திருக்கிறது.

சுமார் 25 கார்களை ஒரே நேரத்தில் நிறுத்தும் அளவுக்கு இடம் கொண்டிருந்திருக்கிறது இந்தக் கட்டிடம். இது இருந்த இடத்தில்தான் இப்போது இந்தச் சுரங்கப் பாதை இயங்கிவருகிறது எனச் சொல்லப்படுகிறது.

அப்போது அண்ணாசாலையில் இருந்த எல்ஃபின்ஸ்டோன் தியேட்டருக்கு வருபவர்கள் படம் பார்த்துவிட்டு ரவுண்டானா ஐலண்டில் அமைந்திருந்த ஜாஃபர்ஸ் ஐஸ்கிரீம் சென்டருக்கு வந்து செல்வார்களாம். இந்த தியேட்டர் 1970-கள் வரை செயல்பட்டிருக்கிறது. பின்னர் 1979-ல் இது ரகேஜா வணிக வளாகமாக மாறிவிட்டது. இது ரிச்சி தெருவின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது. இந்த தியேட்டரில் பிரபல மலையாளப் படம் செம்மீன் ஓராண்டு காலம் வரை ஓடியிருக்கிறது.

இவ்வளவு பெருமைமிக்க இந்த ரவுண்டானாவில் பல திரைப்படக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. எண்பதுகளில் வெளியான படம் முதல் இன்று வெளியாகும் படம் வரை அநேகப் படங்களில் இடம்பெற்றிருக்கிறது இந்த ரவுண்டானா சுரங்கப் பாதை. சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘பிசாசு’ படத்தின் பாடல் காட்சி இந்த சுரங்கப்பாதையில்தான் படமாக்கப்பட்டது. ஜெய் நடிப்பில் வெளியான ‘வலியவன்’ படத்திலும் இந்தச் சுரங்கப்பாதை இடம்பெற்றிருக்கும்.

இந்தச் சுரங்கப் பாதையை உருவாக்கும் பணி 1965-ம் ஆண்டில் தொடங்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகள் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடந்திருக்கின்றன. அதன் பிறகு பணிகள் 1967-ம் நிறைவுபெற்றிருக்கிறது. அந்த ஆண்டிலேயே மக்களின் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. இது இந்தச் சுரங்கப்பாதைக்குப் பொன்விழா ஆண்டு. இந்தச் சுரங்கப் பாதையை அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் திறந்துவைத்திருக்கிறார். இப்போது எல்லீஸ் சாலையிலிருந்து வருபவர்கள் வாலாஜா சாலையைக் கடக்க வேண்டும் என்றாலும், அண்ணா சாலைக்குச் செல்ல வேண்டும் என்றாலும் இந்தப் பாதையைத்தான் பயன்படுத்த வேண்டும். மிகவும் பெரிய சுரங்கப் பாதையான இதில் தினமும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சென்றுவருகிறார்கள்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x