

அடுக்குமாடிக் குடியிருப்புகள் என்றால் தனியார் கட்டுமான நிறுவனங்களின் வீட்டுக் குடியிருப்புத் திட்டங்கள்தான் முதலில் நம் நினைவுக்கு வரும். ஆனால் வீடு வாங்கும்போது அரசின் குடியிருப்புத் திட்டங்களையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு அரசு வீட்டு வசதிக் கழகமும் (TNHB) வீடுகளைக் கட்டி விற்பனைசெய்து வருகிறது. சென்னைப் பெருநகர வளர்ச்சிக் கழகமும் (CMDA) இதுபோல வீடுகளைக் கட்டி விற்பனை செய்து வருகிறது. அது சரி, இம்மாதிரியான அரசு விற்பனை செய்யும் வீடுகளை எப்படி வாங்குவது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதோ அதன் வழிமுறை.
தமிழ்நாடு அரசு வீட்டு வசதிக் கழகம் (TNHB)
தமிழ்நாடு அரசு வீட்டு வசதிக் கழகம் சென்னையின் குடியிருப்புத் தேவையை நிறைவேற்றும் பொருட்டு சென்னை நகருக்குள்ளும் புறநகரிலும் பல புதிய குடியிருப்புத் திட்டங்களை உருவாக்கிவருகிறது. குறைந்த, நடுத்தர, உயர் வருமானம் கொண்ட பிரிவினருக்கான வீடுகள் இதில் கட்டப்பட்டுவருகின்றன.
இப்போது விற்பனைக்கு
தற்போது சோழிங்கநல்லூர் ஃபேஸ் - 2 வீட்டுக்குக் குடியிருப்புத் திட்டத்தில் வீடுகள் விற்பனைக்கு உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் வாங்கப்பட்டுவருகின்றன. 19.08.15 விண்ணப்பங்களை அளிக்க கடைசித் தேதி.
விண்ணப்பதாரருக்கோ அவரது மனைவிக்கோ/கணவனுக்கோ அவரது பிள்ளைகளுக்கோ தமிழ்நாட்டில் வேறெங்கும் சொந்த வீடோ அடுக்குமாடிக் குடியிருப்பு வீடோ இருக்கக் கூடாது. http://www.tnhb.gov.in/TNHBresd.htm
பணம் செலுத்துதல்
தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுக்குமாடி வீட்டின் விலையில் 10 சதவீதத்தைக் கட்ட வேண்டும். முதலில் கட்டிய பணமான ரூ. 2 லட்சம் அதில் கழித்துக்கொள்ளப்படும். மீதி 85 சதவீதத் தொகையை வீடு ஒதுக்கிய ஆணை வந்த 21 தினங்களுக்குள் வாரியத்தில் கட்ட வேண்டும்.
கடைசி 5 சதவீதத் தொகையை வீட்டை ஒப்படைத்த பிறகு வாரியம் மனுதாரரிடம் இருந்து பெற்றுக்கொள்ளும். கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் மனுதாரர் வீட்டை வாங்க மறுத்தால், அவர் அளித்த தொகையில் குறைந்த அளவு பணம் பிடித்துக்கொள்ளப்பட்டு மீதித் தொகை அவருக்குத் தரப்படும்.