Last Updated : 01 Aug, 2015 12:02 PM

 

Published : 01 Aug 2015 12:02 PM
Last Updated : 01 Aug 2015 12:02 PM

பசுமைக் கட்டிடங்களில் இந்தியா 3-ம் இடம்

இந்தியாவில் தற்போது அதிக அளவில் பசுமைக் கட்டிடங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிடங்களைக் கட்டி எழுப்ப வேண்டும் என்னும் எண்ணமும் அதிகரித்துள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்கப் பசுமைக் கட்டிட கவுன்சிலின் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் பட்டியல் ஒன்று உள்ளது. இந்தப் பட்டியலின்படி, பசுமைக் கட்டிடங்கள் கொண்ட முன்னணி பத்து நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

லீடர்ஷிப் இன் எனர்ஜி அன்ட் என்விரான்மெண்டல் டிசைன் (LEED) எனச் சொல்லப்படும் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்புக்கான அமைப்பு இந்த மதிப்பீட்டை நிகழ்த்தியுள்ளது. ஒரு பசுமைக் கட்டிடத்தின் வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாடுகள், பராமரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பசுமைக் கட்டிடங்களைப் பட்டியலிடுகிறது இந்த அமைப்பு.

இந்தப் பத்து நாடுகள் கொண்ட பட்டியலில் முதலிடத்தில் கனடாவும் இரண்டாமிடத்தில் சீனாவும் இருக்கின்றன. அமெரிக்காவைத் தவிர்த்த பிற நாடுகள் மட்டுமே இந்த ஆய்வில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து நாடுகளும் பசுமைக் கட்டிட வடிவமைப்பிலும், உருவாக்கத்திலும் திறம்படச் செயல்படுகின்றன என்றும், எப்போதும் அதிகரித்துவரும் பசுமைக் கட்டிடத் தேவைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன என்றும் அமெரிக்கப் பசுமைக் கட்டிட கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு சதுர மீட்டர் பசுமைக் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன என்பதையும், லீட் (LEED) பசுமைக் கட்டிடத் திட்டங்கள் எத்தனை நிறைவேற்றப்படுகின்றன என்பதையும் கொண்டே இந்த மதிப்பீட்டை லீட் நிறுவனம் நடத்தியிருக்கிறது. அதன் படி, இந்தியாவில் லீட் நிறுவனத்தின் சான்றிதழ் பெறப்பட்ட 1,883 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன.

லீட் நிறுவனத்தின் சான்றிதழ் பெறப்பட்ட திட்டங்களில் ஆற்றல், நீர் ஆகியவற்றின் பயன்பாடு குறைவான அளவிலேயே உள்ளது. இந்தக் கட்டிடங்களில் கார்பன் உமிழும் சதவீதமும் குறைவாகவே உள்ளது. மேலும் இந்தக் கட்டிடங்களில் புழங்குவோருக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழலை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுகிறது.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி காரணமாக, எதிர்பார்க்க முடியாத அளவுக்கு விரைவான நகரமயமாதல் ஏற்படுவதாலும், மின்சார வசதியை மேம்படுத்துவதில் நாட்டின் திட்டம் காரணமாகவும் இந்தப் பட்டியலில் முக்கியமான இடத்தை இந்தியாவால் பிடிக்க முடிந்திருக்கிறது என்று அமெரிக்கப் பசுமைக் கட்டிட கவுன்சில் தன் அறிக்கையில் கூறுகிறது.

இந்திய கொள்கை வகுப்பாளரிடமும், வர்த்தக அதிபர்களிடமும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளை லீட் நிறுவனம் முன்மொழிந்துள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட உள்ள 100 ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்தத் தீர்வு முக்கிய கருவியாகச் செயல்படும் என்றும் அமெரிக்க பசுமைக் கட்டிட கவுன்சில் கூறுகிறது.

பசுமைக் கட்டிட உருவாக்கத்தில் சர்வதேச தரவரிசையில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்தியாவின் வளர்ச்சி ஊக்கம் தருகிறது. அதே நேரத்தில் தொழில்நுட்பத்திலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது என்றும் அமெரிக்க பசுமைக் கட்டிட கவுன்சிலின் சிஇஓ கூறுகிறார். பருவகால மாற்றம், தண்ணீர்த் தட்டுப்பாடு போன்ற அச்சுறுத்தல்களை பிற நாடுகள் இந்தியாவின் முழு வீச்சிலான, ஊக்கத்துடன் கூடிய பங்களிப்பின்றி சமாளிக்க முடியாது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

சென்னையின் அசெண்டாஸ் ஐ.டி. பார்க், பெங்களூருவின் தாம்ஸன் ராய்டர்ஸ் கேம்பஸ், குர்கானில் உள்ள எரிக்சன் டவர், மும்பையில் உள்ள நிர்லான் நாலட்ஜ் பார்க், பில்டிங் 6 போன்றவை லீட் நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற பசுமைக் கட்டிடங்கள்.

பெரும் கட்டிடங்களுக்கு மட்டுமல்லாமல் சிறு சிறு கட்டிடங்களுக்குமே பசுமைக் கட்டிடங்கள் என்பவை மிக உகந்தவை. நமது சுற்றுச் சூழலையும் பராமரிக்க இயற்கையையும் பேண பசுமைக் கட்டிடங்கள் கட்டுவதே தற்காலத் தேவை என்பதை வலியுறுத்துவதில் இந்தப் பட்டியல் உதவுகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x