

மிதிலேஷ்
கடந்த இருபது ஆண்டுகளாக வீட்டுக் கடன் வழங்குவது அதிகரித்துவருகிறது. கடன் வழங்குவதில் வங்கிகளுக்கு இடையில் கடும் போட்டியும் நிலவுகிறது. முன்பெல்லாம் வீட்டுக் கடன் விண்ணப்பத்தை அளித்துவிட்டு நாம்தான் பின்னால் அலைய வேண்டியிருக்கும்.
இப்போது நிலைமை மாறியிருக்கிறது. வீட்டுக் கடனை திரும்பச் செலுத்தும் திறனும் வங்கிகள் கேட்கும் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்துவிட்டால், வீட்டுக் கடனை எளிதாகப் பெற்றுவிடலாம். வயது குறைந்தவர்களுக்கு வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த 25, 30 ஆண்டுகளுக்கு வங்கிகள் அவகாசம் வழங்குகின்றன. நீண்ட காலத்துக்கு வீட்டுக் கடனைத் திரும்பி செலுத்தும்போது அதில் சாதகம், பாதகம் என இரண்டு அம்சங்களுமே இருக்கின்றன.
வீட்டுக் கடனில் மிகப் பெரிய சிக்கல் இருக்கிறது என்றால், அது அதிக அளவில் செலுத்தப்படும் வட்டிதான். உதாரணத்துக்கு ஒருவர் 25 ஆண்டுகளுக்கு 8.50 சதவீத வட்டியில் 30 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம்.
அவருக்கான இ.எம்.ஐ. மாதந்தோறும் 24,157 ரூபாய். ஒரு வேளை அவர் 25 ஆண்டுகளுக்கும் இ.எம்.ஐ. செலுத்துகிறார் என்றால், வங்கிக்கு முழுவதும் கட்டும் தொகை 72,47,100 ரூபாய். இதில் அசல் தொகையான 30 லட்சத்தைக் கழித்துவிடுங்களேன். அப்படி என்றால், 25 ஆண்டுகளுக்குச் செலுத்தப்படும் வட்டித் தொகை மட்டுமே 42,47,100 ரூபாய். அதாவது அந்த நபர் வாங்கிய கடனைவிட சுமார் ஒன்றரை மடங்கு அதிகமாக வட்டி கட்ட வேண்டியிருக்கும்.
அதாவது வீட்டுக் கடனை நீண்ட காலத்துக்குக் கட்டும்போது வட்டித் தொகையை அதிகமாகச் செலுத்தக்கூடிய ஆபத்து தொடர்ந்துகொண்டே இருக்கும். 8.50 சதவீதத்தில் கடன் வாங்கியிருப்பீர்கள். பணவீக்கம், பொருளாதார நிலையைக் காரணம் காட்டி வட்டி விகிதம் இடையிடையே உயரவும் செய்யலாம்.
அப்படி வட்டி விகிதம் உயர்ந்தால், செலுத்தப்படும் இ.எம்.ஐ. தொகை கூடுதலாகும் அல்லது கடனைத் திரும்பச் செலுத்தும் காலத்தை மேலும் நீட்டித்துவிடுவார்கள். கடனைக் கட்டி முடிக்கும்வரை இந்த ஆபத்து இருந்துகொண்டே இருக்கும்.
சிலர் வருமான வரிக்குக் கணக்குக் கட்ட முதலீடுகள் பெரிய அளவில் இருக்காது. நீண்ட காலத்துக்குத் தவணையைச் செலுத்தும்போது அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை செலுத்தும் வட்டிக்கு விலக்குப் பெறலாம். அது 25 ஆண்டுகள் வரை கிடைக்கும் என்பது சாதகமான அம்சம்தான். ஆனால், குறைந்த தொகை விலக்கு பெறுவதற்காக அதிக அளவில் வட்டிக் கட்டுவது ஏற்புடையது அல்ல.
வீட்டுக் கடனில் கூடுதல் வட்டியைச் செலுத்துவதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் சில வழிகளும் உள்ளன. வீட்டுக் கடனைத் திரும்பச் செலுத்த 25 ஆண்டுகள்வரை அவகாசம் வாங்கியிருந்தாலும், கையில் பணம் கிடைக்கும்போதெல்லாம் அதைக் கொண்டு கடனை அடைத்துக் கொண்டே வர வேண்டும். இதனால் கடன் காலத்தைக் குறைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
குறைந்த இ.எம்.ஐ., வருமான வரி விலக்கு எனச் சில சலுகைகளுக்காக வீட்டுக் கடனை நீண்ட காலத்துக்குச் செலுத்துவது நல்லதல்ல. மிக விரைவாக வீட்டுக் கடனைச் செலுத்தி முடித்தால், இ.எம்.ஐ. தொகையைச் சேமிப்பாக மாற்றிக்கொள்ளலாம்.
அந்தப் பணத்தை வேறு முதலீடுகள் செய்யவும் வாய்ப்பு ஏற்படும். இன்னொன்று, 30 லட்ச ரூபாயில் வாங்கிய வீட்டுக்கு முழுமையாக 72 லட்ச ரூபாயைச் செலுத்தினால், 25 ஆண்டுகள் கழித்து அந்த வீட்டின் மதிப்பு 72 லட்ச ரூபாய் அளவுக்கு உயர்ந்தால் மட்டுமே உங்களுடைய அசலுக்கு உத்திரவாதம் கிடைக்கும். இல்லையென்றால், சொந்த வீடு இருக்கிறது என்ற திருப்தியோடு இருந்துகொள்ள வேண்டியதுதான்.