Published : 26 Oct 2019 01:21 PM
Last Updated : 26 Oct 2019 01:21 PM

காலத்தைக் கடந்த கட்டிடக் கலை ராணி

ந.வினோத் குமார்

இந்திய விடுதலைக்குப் பிறகு, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கட்டமைப்பதில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் அளித்த பங்கு, அளப்பரியது. இந்தியாவில் தான் என்றில்லை, பக்கத்து நாடான இலங்கையிலும் அப்படித்தான். ஆனால், பெண்களின் பங்களிப்பை இருட்டடிப்புச் செய்வதில் எந்த நாட்டவரும் சளைத்தவரல்ல. ஆண்கள் எப்போதும் ஆண்கள்தாமே?

இன்றும் பொறியியல் கல்லூரியில் கட்டுமானப் பொறியியல் பிரிவில் ஒரு பெண் சேர்ந்தால், அவரை ஏற இறங்கப் பார்க்கும் சமூகம் இது. ‘செங்கல், சிமெண்ட், கம்பி... இதெல்லாம் நமக்கு ஒத்து வருமாம்மா..?' என்று பரிதாபத்துடன் கேட்க ஒரு கூட்டம் கிளம்பி வந்துவிடும். ஆண்கள் கோலோச்சும் கட்டுமானப் பொறியியலுக்கே இப்படி என்றால், ஆண்களாலேயே சுவடு பதிக்க இயலாத ‘ஆர்க்கிடெக்சர்' எனப்படும் கட்டிடக் கலைத் துறை பற்றிக் கேட்கவே வேண்டாம்.

ஒரு நாலைந்து கட்டிக் கலைஞர்களின் பெயர்களைச் சொல்லுங்கள் என்று கேட்டால் அந்த ஐந்து பெயர்களுமே ஆண்களுடையதாகத்தான் இருக்கும். அவர்களைப் பற்றி நிறைய எழுதப்பட்டுவிட்டன. முதன்முறையாக, ஒரு பெண் கட்டிடக் கலைஞரைப் பற்றி ‘பிளாஸ்டிக் எமோஷன்ஸ்' என்ற தலைப்பில் ஷிரோமி பின்டோ என்பவர் எழுதிய நாவலை பெங்குவின் பதிப்பகம் சமீபத்தில் வெளியிபட்டுள்ளது.

இலங்கையின் முதல் பெண் கட்டிடக் கலைஞரான மின்னெட் த சில்வாதான் இந்த நாவலின் மையக் கரு. அன்றைய இலங்கை அரசியல்வாதி ஜார்ஜ் சில்வாவுக்கும், இலங்கையில் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டுமென்று போராடிய ஆக்னஸ் சில்வாவுக்கும் பிறந்தவர் மின்னெட் சில்வா. படிப்பை முடித்துவிட்டு இவர் இந்தத் துறைக்குள் வந்த வேளையில் லு கார்பூசியே எனும் பிரஞ்சுக் கட்டிடக் கலைஞர், மிகப் பெரிய ஆளுமை. மின்னெட்டுக்கு 25 வயதென்றால், அவருக்கு 45 வயதாவது இருந்திருக்கும். முதலில் கலைஞர்- ரசிகை என்ற நிலையில் அறிமுகமாகி, நண்பர்கள் என்று வளர்ந்து, பிறகு காதலர்கள் என்ற நிலைக்குச் சென்றார்கள்.

ஒரு பக்கம் இந்தியாவின் சண்டிகர் மாநிலத்தில் கார்பூசியே கட்டிடக் கலையில் தன் நிபுணத்துவத்தைக் காட்டிக்கொண்டிருக்க, அதே வேளையில் இலங்கையில் தனது திறமையைப் பறைசாற்றினார் மின்னெட். அந்த நாட்டின் இரண்டாம் பெரிய நகரமான கண்டியில், வீட்டு வசதி வாரிய பணியாளர்களுக்காகக் கட்டிய ஒவ்வொரு வீடும் தனித்துவம் மிக்கது.

தமிழ்நாட்டில் கட்டிக்கொடுக்கப்படும் தொகுப்பு வீடுகள் போன்று ஒரே மாதிரியாக அல்லாமல், குடியிருக்கப் போகும் ஒவ்வொரு பணியாளரின் வாழ்க்கை முறை, அவர்களது தேவைகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள ஒரு வினாத்தாளைத் தயாரித்து, அதன் மூலம் அவர்களது விருப்பங்களைத் தெரிந்துகொண்டு, பிறகே வீடுகளைக் கட்டத் தொடங்கினார் மின்னெட்.

இந்தக் காலகட்டத்தில் அந்த இரண்டு மேதைகளும் சந்தித்துக் கொண்ட தருணங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எனினும், அவர்களுக்கு இடையில், தொடர்ந்து கடிதப் போக்குவரத்து நடந்துகொண்டிருந்தது. கார்பூசியேவை மின்னெட் ‘கார்பூ' என்று செல்லமாக அழைக்க, மின்னெட்டை கார்பூசியே ‘என் பறவையே' என்று விளித்தார்.

நாவலில் இந்த இரண்டு ஆளுமைகளும் எழுதிக் கொள்வதாக இடம்பெற்றுள்ள கடிதங்கள், பெரும்பாலும் கற்பனையானவையாகவே இருந்தாலும், நிஜ வாழ்வில் கடிதங்களின் வாயிலாக அவர்கள் என்ன மாதிரியான உரையாடலை நடத்தியிருப்பார்கள் என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

மின்னெட் எழுதிய ஒரு கடிதத்தில், ‘என்னதான் நான் திறமை மிக்க கட்டிடக் கலைஞராக இருந்தாலும், என் திறமையைப் பார்க்காமல், ‘கேர்ள்' (பெண் பிள்ளை) என்ற நிலையிலேயே என்னை நடத்துவது எனக்குப் பெரும் அவமானமாக உள்ளது' என்று எழுதுகிறார். எனில், அவர் எப்படிப்பட்ட போட்டி, பொறாமை மிகுந்த சூழலில் சிறந்த கட்டிடக் கலைஞராகப் பரிணமித்திருப்பார் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.

என்னதான் அவர் திறமைமிக்கக் கலைஞராக இருந்தாலும், 50-களில் எல்லாம் அவருக்கு ‘புராஜெக்ட்' வருவது நின்றுபோனது. அவரிடம் தொழில் கற்ற ஒரு ஆண் கட்டிடக் கலைஞரே, மின்னெட்டின் யோசனைகளை, புதுமைகளைத் தன்னுடையது என்று சொல்லி, கட்டிடங்கள் கட்டி, சம்பாதித்து, பெயர் வாங்கிக் கொண்டு போனார். ஜியோஃபரி பாவா எனும் ஆண் கட்டிடக் கலைஞரை, இலங்கை மிகப் பெரிய திறமைசாலியாகக் கொண்டாடுகிறது. அவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முந்தையவர் மின்னெட்.

ஆனால், பாவாவுக்கு தங்க மெடல் கொடுத்து கவுரவித்த 14 ஆண்டுகளுக்குப் பிறகே 1996-ல் மின்னெட்டுக்கு அந்தக் கவுரவம் அளிக்கப்பட்டது. இந்த அவமானங்களை எல்லாம் தாங்கி வாழ்ந்த மின்னெட், தனது 80-ம் வயதில் மருத்துவமனையில் தனிமையில் இறந்துபோனார்.

மின்னெட் இந்தியாவில் இருந்த காலங்களில் எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த், அணு விஞ்ஞானி ஹோமி பாபா போன்றோரின் அறிமுகம் கிடைத்தது. இந்த அறிமுகங்களின் பயனாக, முல்க் ராஜ் ஆனந்த், மின்னெட்டின் தங்கை அனில் த சில்வா ஆகியோருடன் சேர்ந்து ‘மார்க்' எனும் கட்டிடக் கலைக்கான இதழ் ஒன்றைத் தொடங்கினார் மின்னெட். அதில் கட்டிடக் கலை குறித்துப் பல கட்டுரைகளை அவர் எழுதினார். அந்த இதழ் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

நாவலின் ஓரிடத்தில் மின்னெட்டை கார்பூசியே ‘ஷி இஸ் டைம்லெஸ்' (அவள் காலங்களுக்கு அப்பாற்பட்டவள்) என்று தன் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருப்பதாக வரும். மின்னெட் செய்திருக்கும் சாதனைகளைப் பார்த்தால் அது உண்மைதான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்..!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x