Published : 31 Aug 2019 11:34 AM
Last Updated : 31 Aug 2019 11:34 AM

கடன் புள்ளிகள் குறைவாக இருக்கின்றனவா?

அனில்

முன்பு வங்கியில் கடன் வேண்டி விண்ணப்பித்தால் ஏதாவது அடமானத்தின் அடிப்படையில் கடன் தருவார்கள். 2000-க்குக் முன்பு வரை இதுதான் நிலை. வீட்டுப் பத்திரம், நகை போன்ற ஏதாவது ஒன்றை அடமானத்துக்கு வைக்க வேண்டும். சிலர் ஏற்கெனவே பல கடன்களை வாங்கி வைத்துவிட்டு மேலும் மேலும் கடனுக்கு விண்ணப்பிப்பார்கள். அதுபோன்ற நபர்களுக்குக் கடன் கொடுத்த வங்கிகள் அதை வசூல் செய்வதற்குப் பெரும்பாடு படும்.

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு கடன் தகவல் நிறுவனம் (Credit Information Bureau (India) Ltd - CIBIL) 2000-ல் தொடங்கப்பட்டது. கடன் வாங்குபவர்கள், கிரெடிட் கார்டு பயனாளிகள் ஆகியோர் குறித்த தகவல்களைத் திரட்டுவதுதான் இந்த நிறுவனத்தின் முக்கியப் பணி. வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை தங்களிடம் கடன் வாங்குவோர் குறித்த தகவல்களை மாதந்தோறும் இந்த நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

வீடு கட்ட, வாகனம் வாங்க, கல்யாணம் முடிக்க என வாழ்க்கையின் அத்துணைத் தேவைகளையும் கடன் வாங்கியே எல்லோரும் நிறைவேற்றுகிறோம். இப்படிக் கடன் வாங்கிப் பயனடையும் சிலர் வங்கிக் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துவது இல்லை. இம்மாதிரியான விஷயங்களை சிபில் அமைப்பு கண்காணிக்கும். வங்கியில் கடன் பெற்றவர்களின் தகவல்களைச் சம்பந்தப்பட்ட வங்கி, நிதி நிறுவனத்திடம் இருந்து பெற்று, கண்காணித்து வரும். இதை வைத்து இந்த அமைப்பு கடன் தகவல் அறிக்கையை உருவாக்கும்.

அதனடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும். இதனடிப்படையில்தான் மீண்டும் கடன்கள் வழங்கப்படும். கடன் புள்ளிகள் பொதுவாக 750க்கும் மேல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கடன் அட்டைக்கான மாதக் கட்டணம், கடனுக்கான தவணை போன்றவற்றைச் சரியாகச் செலுத்தவில்லை என்றால் கடன் புள்ளிகள் சரியும். அதுபோல் கடன் அட்டைகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் வாங்கியிருக்கும் எல்லாக் கடன்களும் சிபிலுடன் இணைக்கப்பட்டிருப்பதால் அது எல்லாம் உங்கள் கடன் புள்ளியில் பிரதிபலிக்கும். அதைச் சரியாகப் பராமரிப்பு அவசியம். 750க்கு மேல் இருந்தால் மிகச் சிறப்பான புள்ளிகள் (Excellent) கிடைக்கும். அதேவேளை அது 750க்கு கீழ் சரிந்து 700 வரை இருந்தால் சிறந்த புள்ளிகள் (Good) கிடைக்கும். 700க்கும் கீழ் சரிந்து 650 வரை இருந்தால் நன்று (Fair) என்ற அளவில்தான் புள்ளிகள் கிடைக்கும். 650க்கும் கீழ் சரிந்தால் அதை ‘poor’ என்றும் 550 கீழ் சரிந்தால் ‘bad’ என்றும் சிபில் வகைப்படுத்துகிறது.

ஒருவேளை சிபில் ஸ்கோர் உங்களுக்குக் குறைவாக இருந்தால், கடன் புள்ளிகளை அதிகப்படுத்த வேண்டும். ஏற்கெனவே உங்களுக்கு இருக்கும் கடன்களைத் திருப்பிச் செலுத்த முயல வேண்டும். சரியான தவணைக் காலத்தில் கடன் அட்டைக்கான கட்டணம் போன்றவற்றைச் செலுத்த வேண்டு. புதிய கடனுக்கு விண்ணப்பிக்கும்போது இணை விண்ணப்பதாரராக உங்கள் கணவனையோ மனைவியையோ சேர்த்துக்கொள்ளலாம். துணை விண்ணப்பதாரரின் கடன் புள்ளிகளையும் சேர்த்தே வங்கிகள் கணக்கிடும் என்பதால் கடன் கிடைப்பது எளிதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x